·   ·  1568 posts
  •  ·  0 friends

நாட்டு தக்காளி VS பெங்களூர் தக்காளி

மளிகைக் கடைக்கோ அல்லது சந்தைக்கோ சென்றால், அங்கே இரண்டு விதமான தக்காளிகள் இருக்கும். ஒன்று உருண்டையாக, கொஞ்சம் நசுங்கியது போல இருக்கும் நாட்டு தக்காளி. இன்னொன்று ஆப்பிள் வடிவில், பளபளவென்று கெட்டியாக இருக்கும் பெங்களூரு தக்காளி.. இந்த 2 தக்காளிக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன தெரியுமா? இதில் எது பெஸ்ட் தெரியுமா? இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்.

தக்காளி என்பது முதலில் நம்முடைய ஊர் காய் கிடையாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டிலிருந்துதான் இது இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டது.

நாட்டு தக்காளி முற்றிலும் உருண்டையாக இருக்காது, சற்று தட்டையாக, ஆங்காங்கே சுருக்கங்களுடன் காணப்படும். இதன் தோல் மிகவும் மெலிதானது, தொட்டால் மென்மையாக இருக்கும். இது லேசான ஆரஞ்சு மற்றும் பச்சை கலந்த நிறத்தில் இருக்கும். பெங்களூரு தக்காளி ஆப்பிள் வடிவில், அடர் சிவப்பு நிறத்தில், பளபளவென்று இருக்கும். இதன் தோல் தடிமனாக, கல் போல கெட்டியாக இருக்கும்.

செம்ம டேஸ்ட் தக்காளி

நாட்டு தக்காளியில் புளிப்புச் சுவை மிக அதிகம்.. உள்ளே சாறும், விதைகளும் ஏராளமாக இருக்கும். ரசம், மீன் குழம்பு, காரக்குழம்பு, சாம்பார், தக்காளி சட்னிக்கு நாட்டு தக்காளியைத்தான் பயன்படுத்த வேண்டும். இதனை எண்ணெயில் வதக்கும்போது தோல் தனியாகப் பிரிந்து, குழைய வெந்து அசல் சுவையைத் தரும். பச்சையாக இருக்கும்போது 'பச்சை தக்காளி பருப்பு கடைசல்' செய்ய இதுவே சிறந்தது.

பெங்களூரு தக்காளியில் புளிப்பு குறைவாகவும், லேசான இனிப்புச் சுவையும் இருக்கும். இதில் சாறு குறைவாகவும், சதைப்பகுதி அதிகமாகவும் இருக்கும். பிரியாணி, தக்காளி சாதம், குருமா மற்றும் பன்னீர் பட்டர் மசாலா போன்றவற்றுக்கு இதுவே செட் ஆகும். சாம்பார், ரசத்திற்கு இதைப்போட்டால் சமையல் சவச்சவவென்று ஆகிவிடும். சாலட், சாண்ட்விச்சிற்கு இது சிறந்தது. ஆனால், இதன் பச்சை தக்காளி சுவையின்றி சப்பையாக இருக்கும்.

எது பெஸ்ட் தக்காளிகள்

நாட்டு தக்காளி விதைகள் நம்முடைய மண்ணின் தட்பவெப்ப நிலையைத் தாங்கி வளர்ந்த பாரம்பரிய ரகங்கள். அதனால், அவற்றுக்கு இயல்பாகவே பூச்சிகளை எதிர்க்கும் இயற்கை நோய் எதிர்ப்புத் திறன் அதிகம்.

ஹைப்ரிட் ரகமான பெங்களூரு தக்காளிக்கு இந்த இயற்கை எதிர்ப்புச் சக்தி குறைவு. நாட்டு தக்காளியில் லைகோபீன் என்ற புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்து மிக அதிகம். இதை எண்ணெயில் வதக்கி சமைக்கும்போது இந்தச் சத்து உடலுக்கு முழுமையாகக் கிடைக்கும். இது நல்ல செரிமானத்தையும் தரும்.

நாட்டுத் தக்காளி தரும் நன்மை

லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்து மிக மிக அதிகம் என்பதால், இந்தச் சத்து தக்காளி பச்சையாக இருக்கும்போது கிடைப்பதை விட, அதை எண்ணெயில் போட்டு நன்றாக வதக்கி சமைக்கும்போதுதான் உடலுக்கு முழுமையாகக் கிடைக்கும். இது உடலுக்குப் பல நன்மைகளைத் தருகிறது.

அதாவது நம்முடைய ஊர் மண்ணில் இயற்கையாக விளையும் நாட்டு தக்காளியில் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உடலுக்கு நன்மை தரும் அமிலங்கள் சற்று கூடுதலாகவே இருக்கும். உடலுக்குக் குளிர்ச்சியையும், நல்ல செரிமானத்தையும் இது தரும்.

நாட்டு தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருக்கும். ஹைபிரிட் தக்காளியில் அதன் வகையை பொறுத்து மிதமாகவோ, அதிகமாகவோ இருக்கலாம்.. இரண்டிலுமே நார்ச்சத்து போதுமான அளவில் இருக்கும். அதிக ரசாயன உரமின்றி வளர்க்கப்படுவதால் நாட்டு தக்காளியில் ஊட்டச்சத்து அடர்த்தி அதிகமாக இருக்கும். ஹைபிரிட் தக்காளி, வளர்ப்பு முறையை பொறுத்து மாறுபடும்.

எப்படி யூஸ் செய்யலாம்

விலை மற்றும் சேமிப்பைப் பொறுத்தவரை, நாட்டு தக்காளி சீக்கிரமே அழுகிப் போகக்கூடிய தன்மை கொண்டது. அதன் தோல் மெலிதாக இருப்பதால், வாங்கி வந்த இரண்டு அல்லது மூன்று நாட்களிலேயே அது கனிந்து, அழுகத் தொடங்கிவிடும்.

ஆனால், பெங்களூரு தக்காளி தடிமனான தோலைக் கொண்டிருப்பதால், பிரிட்ஜில் வைக்காமல் வெளியில் வைத்திருந்தாலே ஒரு வாரம் வரை தாங்கும். சீக்கிரத்தில் கெட்டுப் போகாது என்பதால், ஹோட்டல் கடைக்காரர்களும், தூரத்து ஊர்களுக்குப் பயணம் செய்பவர்களும் பெங்களூரு தக்காளியையே அதிகம் விரும்பி வாங்குவார்கள்.

இப்போது சொல்லுங்கள், இன்று உங்கள் சமையலறையில் என்ன ரகசியம் சமையலாக மாறப்போகிறது? ரசமும் சட்னியும் என்றால் நாட்டு தக்காளியை எடுங்கள், பிரியாணியும் குருமாவும் என்றால் பெங்களூரு தக்காளியைத் தேர்ந்தெடுங்கள். சரியான தக்காளியைத் தேர்ந்தெடுத்து, ஆரோக்கியமாகவும் சுவையாகவும் சமைத்து அசத்துங்கள்..

  • 30
  • More
Comments (0)
Login or Join to comment.