ஔவை
ஒருநாள் காட்டுவழியாக வந்து கொண்டிருக்கிறார் ஔவை.....
மழை மேகம் திரண்டு வர மழை வந்துவிடுமோ என்று ஒதுங்குவதற்காக அங்குமிங்கும் பார்க்கிறார்.
அங்கே ஓர் அழகிய காட்சி,
மயில் ஒன்று மழை மேகம் கண்டு தன்
தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.
கண்கள் விரிய அந்த காட்சியைக் கண்டு மகிழ்கிறார்.
திடீரென்று மறுபக்கத்திலிருந்து
ஒரு சலசலப்பு.
அங்கே இன்னொரு காட்சி அவரது கவனத்தை ஈர்க்கிறது.
வான்கோழி ஒன்று தனது உடலைச் சிலுப்பிக்
கொண்டிருக்கிறது.
உனக்கு மட்டும் தான்
தோகை இருக்கிறதா? இதோ பார். எனக்கும்தான் தோகை இருக்கிறது
நானும் தோகையை விரித்து ஆடுகிறேன் பார் என்று மயிலுக்குச் சவால் விடுவதுபோல் தோகையை விரிப்பதற்காக
உடம்பு முழுவதையும் அசைத்து அசைத்து
ஆட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. முடியவில்லை.
எத்தனை முயற்சி
செய்தும் வான்கோழியால் மயிலைப்
போன்று தோகையை விரித்து ஆட முடியவில்லை.
மயிலைப் பார்த்துதான் இப்படி ஆட்டிக்கொண்டு நிற்கிறாயா? என்று நினைத்ததும் ஔவைக்கு உள்ளுக்குள் சிரிப்பு.
கூடவே மற்றொரு சிந்தனை......
இந்த வான்கோழியின் செயல்
ஏதோ ஒன்றை நினைவுபடுத்துகிறதே.
இது எப்படி இருக்கிறது தெரியுமா?
கல்வியை முறையாக கற்காத அரைகுறை ஒருவன் கவிபாட ஆசைப்படுகிறான்.
அதனால் அடுத்தவன் எழுதிய கவிதையை தான் எழுதியதாக
நினைத்துக்கொண்டு மற்றவர்கள்
முன்னால் கொண்டுபோய் படிக்க முயன்று கொண்டிருக்கிறான்.
அவனால் சரியாகப் படிக்க முடியவில்லை.
திக்குகிறான்....
திணறுகிறான்....
திண்டாடுகிறான்....
அதே திணறலும் திண்டாட்டமும்
இந்த வான்கோழியிடமும் இருக்கிறது
என்று நினைக்கிறார்.
நினைத்ததை நினைத்த இடத்தில் நினைத்தபடியே பாடுவது ஔவையின் இயல்பாயிற்றே ...
சும்மா இருப்பாரா?
ஔவையின் இந்த நினைப்புத்தான் இங்கே
பாடலாக வெளிவருகிறது.....
"கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் -
தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து
ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி"