·   ·  1112 posts
  •  ·  0 friends

மனிதன் செய்யும் நற்செயல்

ஒரு ஊரில் ஒரு ஆள் இருந்தான். அவன் பேரில் ஒரு குற்றச்சாட்டு. அரண்மனையிலிருந்து, உன்னை விசாரிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, அரண்மனை விசாரணை மண்டபத்துக்கு வந்து போ என்றது, அரசனின் ஆணை.

நம்ம பேர்ல எந்த தப்பும் இல்லையே. நாம் எந்த தவறும் செய்யலையே.... என்று நினைத்தான், அந்த ஆள். ஆனாலும் அரசாங்க உத்தரவு அதை அலட்சியம் செய்ய முடியுமா? போய்த்தான் ஆக வேண்டும். தனியாக போக அவனுக்கு தயக்கமாக இருந்தது.

துணைக்கு யாராவது வந்து, எனக்காக கொஞ்சம் வாதாடினால் தேவலை. யாரை அழைத்துக் கொண்டு போவது, என்று யோசித்தான். அவனுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரை அழைத்து செல்லலாம் என்று முடிவு செய்தான்.

அந்த மூவரில் மிகவும் நெருக்கமான ஒரு நண்பரின் வீட்டுக்கு போய் கதவை தட்டினான். திறந்த நண்பனிடம் விஷயத்தை சொல்லி அரண்மனைக்கு அழைத்தான். என்னால் வரமுடியாது என்று சொல்லிவிட்டான், அவன். இவனுக்கு ஏமாற்றமாக போய் விட்டது. ரொம்பவும் நெருக்கமாக இருந்த இவனே இப்படி சொல்லிவிட்டானே என்று வருத்தப்பட்டான்.

சரி, பரவாயில்லை. இன்னொரு நன்பனிடம் போவோம்... என்று முடிவு செய்து இரண்டாவது நண்பனை தேடி சென்றான். இரண்டாம் நண்பனோ விஷயம் அனைத்தையும் கேட்டுவிட்டு அரண்மனை வாசல் வரைதான் நான் வருவேன். அங்கேயே நின்று கொள்வேன் அதற்கு மேல் வரமாட்டேன் என்று கூறினான். அப்படி அதுவரைக்கும் வந்து என்ன பிரயோஜனம்? கடைசி வரைக்கும் நம்ம கூட வந்து, நமக்காக வாதாடணுமே அதுதானே முக்கியம்... என்று நினைத்தான்.

அடுத்தபடியாக மூன்றாவது நண்பனிடம் போனான். அவன் அதிக நெருக்கம் இல்லை. இருந்தாலும் போனான். விபரத்தை சொன்னான். அவன் உடனே சட்டையை போட்டுக் கொண்டு "வா போகலாம்" என்று புறப்பட்டு விட்டான். விசாரணையின் போது, தன் நண்பனுக்காக வாதாடி, பரிந்து பேசி, விடுதலை வாங்கிக் கொடுத்தான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று நண்பர்கள் உண்டு. முதல் நபருக்கு பெயர், பணம். இரண்டாம் நபருக்கு பெயர், சொந்தம். மூன்றாம் நபர் அவன் செய்த "நற்செயல்கள்".

இறுதி பயணத்தின் போது, பணம் கூட வராது. சொந்தம், கல்லறை வரைக்கும் வரும். நற்செயல்கள் தான் கூடவே வரும். அதாவது, நமக்கு பின்னாலும் நம்மைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கும்.

மனிதன் நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.

  • 35
  • More
Comments (0)
Login or Join to comment.