·   ·  1538 posts
  •  ·  0 friends

புருஷாமிருகம்

தர்மர் ராஜசூய யாகம் செய்யத் திட்டமிட்டபோது, யாகத்திற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வரவும், மற்ற நாட்டு மன்னர்களுக்கு அழைப்பு விடுக்கவும் தனது தம்பிகளை அனுப்பினார். அப்போது அங்கிருந்த ரிஷிகள், "புருஷாமிருகம்" என்று அழைக்கப்படும் அபூர்வ விலங்கு ராஜசூய யாகத்திற்கு வர வேண்டியது அவசியம் என்றும், அது அவ்விடம் உலவினால் மட்டுமே யாகம் முழுமையடையும் என்றும் அறிவுரை கூறினார்கள். தர்மர் இதற்கு முன் இதைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை.

கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே எழுந்து புருஷாமிருகம் பற்றி விவரித்தார். புருஷாமிருகம் என்பது புலியின் உடலும் மனித தலையும் கொண்ட ஒரு விசித்திரமான மிருகம். அது மிக வேகமாக ஓடக்கூடியது, (சில கதைகளில் சிங்க உடலும் மனித முகமும் என்று உள்ளது) அதே சமயத்தில் சிவபக்தியில் சிறந்தது. குபேர வனத்தைப் பாதுகாத்து வரும் அந்த மிருகத்தைப் பிடித்து வருவது மிகவும் கடினமான காரியம் என்று எச்சரித்த கிருஷ்ணர், "பீமா! நீதான் இந்தப் பணிக்குச் சரியான ஆள்" என்று கூறி சில கற்களை பீமனிடம் கொடுத்தார். நேரம் வரும்போது அவற்றை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற ரகசிய அறிவுரையையும் அவனிடம் கூறினார். ரிஷிகளும் கிருஷ்ணரும் பீமனுக்கு ஆசி வழங்கி அவனை வனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பீமன் காட்டிற்குச் சென்று புருஷாமிருகத்தைத் தேடி பல இடங்களில் அலைந்து, கடைசியாக அதைக் கண்டுகொண்டான். அந்த மிருகத்தை யாகத்திற்கு வருமாறு அவன் அழைத்தான். ஆனால் அந்த மிருகமோ, இந்த காடு தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இங்கு உள்ள அனைத்தும் தனக்கே சொந்தம் என்றும் கர்ஜித்தது. "இப்போது நீ இங்கே நுழைந்துவிட்டபடியால் நீயும் எனக்குச் சொந்தம், உன்னை நான் சாப்பிடப்போகிறேன்" என்று பீமனை மிரட்டியது. பீமன் தான் வந்த நோக்கத்தைக் கூறி, அதனை மீண்டும் பணிவுடன் அழைத்தான்.

புருஷாமிருகம் பீமனுடன் ஒரு ஒப்பந்தம் செய்தது. இருவரும் ஓட்டப்பந்தயம் செய்திடத் தீர்மானித்தனர். "பீமா! நம் இருவரில் யார் காட்டின் எல்லையை அடைந்து நாட்டிற்குள் முதலில் பிரவேசிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர் ஆவார். நீ முதலில் சென்றால் நீ அழைத்தபடி நான் யாகத்திற்கு வருவேன். ஒருவேளை நான் வெற்றி பெற்றால் உன்னை உயிரோடு விழுங்கிவிடுவேன்" என்றது. பீமனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.

பீமன் ஓடத்தொடங்கிச் சில நாழிகைகள் கழித்தே புருஷாமிருகம் ஓடத் தொடங்கியது. பீமன் நான்கு காத தூரம் கடந்த நிலையில் தான் புருஷாமிருகம் தன்னுடைய முதல் அடியையே எடுத்து வைத்தது. தன் வேகத்தில் அபார நம்பிக்கை கொண்டிருந்த அந்த மிருகம், மிக எளிதாக அசுர வேகத்தில் ஓடி பீமனை நெருங்கியது.

அந்தச் சமயத்தில் கண்ணனின் அறிவுரைப்படி தான் வைத்திருந்த கற்களில் ஒன்றை பீமன் தரையில் போட்டான். அங்கே ஒரு சிவலிங்கம் தோன்றியது. சிவபக்தியில் சிறந்த புருஷாமிருகம் அங்கேயே நின்று அந்த லிங்கத்தை வணங்கியது. (அனுமன் காட்டில் தோன்றி தனது வாலில் இருந்து முடிகளை பீமனிடம் அளித்ததாகவும், ஒவ்வொருமுறை மிருகம் தன்னை நெருங்கும் போதும் அந்த முடிகளை பீமன் தறியில் போட்டதும் அங்கே சிவலிங்கம் தோன்றியதாகவும் சில பதிப்புகளில் உள்ளது)

பிறகு மீண்டும் அது ஓடத் தொடங்கியது. பீமனைப் பிடிக்கும் நேரத்தில் மீண்டும் அவன் ஒரு கல்லைப் போட்டான். இவ்வாறாக அந்த மிருகம் தன்னை நெருங்கும் போதெல்லாம் ஒவ்வொரு கல்லாகப் போட்டு, இறுதியாகக் காட்டின் எல்லையை அடையப் போகும் நேரத்தில் மிருகம் அவனின் காலைப் பிடித்துக்கொண்டது. அப்போது பீமனின் ஒரு கால் காட்டின் எல்லையிலும், மறு கால் நகரத்தின் எல்லையிலும் இருந்தது.

"நீ காட்டைப் கடப்பதற்குள்ளாகவே நான் உன்னைப் பிடித்துவிட்டேன், அதனால் நீ எனக்குத்தான் சொந்தம்" என்று மிருகம் சொல்ல, "இல்லை, என்னுடைய ஒரு கால் நகர எல்லையில் உள்ளது, நான் வெற்றி பெற்றேன்" என்று பீமன் சொல்ல, இருவரும் நீதி வேண்டி தர்மரிடம் சென்றனர்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட தர்மர் சற்று யோசித்தார். பீமன் தன் தம்பியாக இருந்தாலும் அவர் நீதிநெறிப்படி தீர்ப்பு வழங்கினார். "புருஷாமிருகமே! பீமனின் ஒரு கால் எல்லைக்கு வெளியில்தான் பிடிபட்டது. உடல் ரீதியாகப் பார்த்தால் அவனது உடலின் சரிபாதி பாகம் உனக்கே சொந்தம். எனவே நீ காட்டின் எல்லையில் பீமனின் கால் இருந்த அந்தப் பாதியை மட்டும் உண்ணலாம், மற்றப் பாதியை நீ தொடக்கூடாது" என்றார்.

புருஷாமிருகம் சிரித்துக்கொண்டே பீமனை உண்ண நெருங்கிய போது சகாதேவன் குறுக்கிட்டான். "அண்ணா! நீதிப்படி ஒரு பாதி மட்டுமே மிருகத்திற்குச் சொந்தமானது. அதன்படி பார்த்தால், பீமன் அண்ணாவை மிருகம் உண்ணும்போது அவரின் ஒரு பாகத்தில் மட்டுமே வலி இருக்கும் வகையில் மிருகம் அவரை உண்ண வேண்டும். மற்றொரு பகுதியில் வலி ஏற்படக்கூடாது" என்றான். ஆனால் அப்படி ஒரு பாதியில் மட்டும் வலி ஏற்படாமல் உண்ண முடியாது என்பதால், அந்த மிருகம் பீமனை விடுவித்து உரக்கச் சிரித்தது.

"அற்புதம்! தம்பியாக இருந்தாலும் நீதிநெறி தவறாமல் தீர்ப்பு வழங்கி உன் தகுதியை நிரூபித்தாய் யுதிஷ்டிரா! அதே சமயத்தில் சமயோசிதமாக யோசித்து உன் சகோதரனின் உயிரைக் காப்பாற்றிவிட்டாய் சகாதேவா! உங்களது தர்ம குணத்தைக் கண்டு மகிழ்ந்தேன்" என்று கூறி புருஷாமிருகம் யாகத்திற்கு வர சம்மதித்தது. தர்மரும் பல்வேறு தடைகளைத் தாண்டி ராஜசூய யாகத்தை வெற்றிகரமாக நடத்திப் பேரரசராக முடிசூடிக்கொண்டார்.

  • 29
  • More
Comments (0)
Login or Join to comment.