
போரின் பயங்கரத்தைச் சொன்ன படம்
ஜூன் 8, வியட்நாம் போர்: போரின் பயங்கரத்தைச் சொன்ன படம்!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 8ஆம் தேதி, வியட்நாமின் டிராங் பேங் கிராமத்திலிருந்து சிறுவர், சிறுமியர் அலறியபடியே ஓடிவந்தனர். அவர்களுக்கு பின்னால் அணுகுண்டு வெடித்த கரிய புகை.
இந்தக் காட்சியை வியட்நாமிய அமெரிக்கரான 'நிக் வுட்' படம் பிடித்தார். ஆடையின்றி உடல் முழுவதும் காயத்துடன் ஓடிவரும் 9 வயது சிறுமியான 'பான் தி கிம் ஃபூக்' படம் உலகத்தையே உலுக்கிவிட்டது.
போரின் கோரத்தை எடுத்துச் சொல்ல இந்தப் படம் ஒன்றே போதுமானதாக இருந்தது.
அசோசியேட்டட் பிரஸ் ஒளிப்படக் கலைஞர் நிக் வுட் அந்தச் சிறுமியை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அடிக்கடி அவரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.நிக் வுட்டின் அன்பும் சிறுமியின் உயிரைக் காப்பாற்றின. படம் வெளிவந்து உலகத்தை உறைய வைத்தது. பான் தி கிம் ஃபூக், ‘நேபாம் சிறுமி’ (நேபாம்-பெட்ரோல் குண்டு) என்று அழைக்கப்பட்டார்.
நிக் வுட்
1973ஆம் ஆண்டு நிக் வுட் இந்தப் படத்துக்காக புலிட்சர் விருதை வென்றார். பிறகே உலகம் முழுவதும் இந்தப் படம் பிரபலமானது.
ரஷ்யா, சீனா ஆதரித்த வடக்கு வியட்நாமுக்கும் அமெரிக்கா ஆதரித்த தெற்கு வியட்நாமுக்கும் இடையே நடைபெற்ற நீண்ட காலப் போர் 1975ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.
கிம் ஃபூக் - நிக் வுட்
“விமானங்கள் பறந்தன. குண்டுகள் விழுந்தன. தப்பி ஓடும்படி யாரோ கத்தினார்கள். என் உடை தீப்பற்றிக்கொண்டது. அதைக் கிழித்தெறிந்துவிட்டு ஓடினேன். உடல் எல்லாம் தீக்காயம். தாங்க முடியாத வேதனை. பிழைப்பேன் என்று நினைக்கவில்லை. இன்னும்கூட என் உடல் இயல்பாக இல்லை. எவ்வளவோ சிகிச்சைகள் செய்துவிட்டேன்” என்கிறார் கிம் ஃபூக்.
‘நேபாம் சிறுமி’க்கு இது ஐம்பதாவது ஆண்டு. ஆனால், இந்த உலகம் தான் இன்னும் போரிலிருந்து பாடம் கற்கவில்லை!