
காக்கையும் குருவியும்
காக்கையும் குருவியும் இரை தேடியது.
குருவிக்கு நெல்மணி கிடைத்தது
காக்கைக்கு முத்து கிடைத்தது.
நெல்லைத் தின்றுவிட்டது குருவி,
முத்தை வைத்து விளையாடியது காக்கை,
எனக்கு அதைக் கொடு என்று அதிகார தோரணையில் கேட்டது குருவி.
தர மறுத்த காக்கை, மரத்தில் போய் உட்கார்ந்தது.
காக்கையை விரட்டு என்று மரத்திடம் சொன்னது குருவி. மறுத்தது மரம்.
மரத்தை வெட்டு என்று மரவெட்டியிடம் சொன்னது குருவி. அவன் மறுத்தான்.
மர வெட்டிக்கு தண்டனை கொடு என்று பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டது. மறுத்தார் தலைவர்.
பஞ்சாயத்து தலைவரை நீக்க அரசனிடம் சொன்னது. அரசன் மறுத்தான்.
ராஜாவை திட்ட ராணியிடம் சொன்னது.
ராணி மறுத்தாள்.
ராணியின் ஆடையை கடிக்க எலியிடம் சொன்னது.
எலி மறுத்தது.
எலியைக் கொல் என்று பூனையிடம் சொன்னது.
பூனை மறுத்தது.
பூனையைக் கடி என்று நாயிடம் சொன்னது.
நாய் மறுத்தது.
பக்கத்தில் கிடந்த குச்சியிடம் அந்த நாயை அடி என்றது. குச்சி மறுத்தது.
தீயிடம் சென்று குச்சியை எரி என்றது. தீ மறுத்தது.
கடலிடம் சென்று நெருப்பை அணைக்கச் சொன்னது. கடல் மறுத்தது.
யானையிடம் சென்று கடலை குடி என்றது.
யானை மறுத்தது.
கொசுவிடம் சென்று யானையைக் கடி என்றது. கொசு ஒப்புக் கொண்டது.( எந்தத் தகுதியும் இல்லாதவன் எதைச் செய்யவும் தயாராய் இருப்பான்)
என்னைக் கடிக்காதே, கடலை குடித்துவிடுகிறேன் என்றது யானை.
கடல் தீயை அணைக்கவும், நெருப்பு குச்சியை எரிக்கவும், குச்சி நாயை அடிக்கவும் நாய் பூனையைக் கடிக்கவும் பூனை எலியைக் கவ்வவும் எலி ராணியின் ஆடையைக் கடிக்கவும் ராணி ராஜாவை கண்டிக்கவும் ராஜா பஞ்சாயத்துத் தலைவரைத் தண்டிக்கவும் பஞ்சாயத்துத் தலைவர் மரவெட்டியைத் தண்டிக்கவும் மர வெட்டி மரத்தை வெட்ட ஒப்புக் கொள்ளவும் மரம் காக்கையை விரட்டவும் ஒப்புக் கொண்டன.
ஒரு சின்ன விஷயத்தை எப்படி ஊதிப் பெரிதாக்கி இருக்கிறாய். அன்போடு கேட்டு இருந்தால் நானே தந்திருப்பேன். உனது முதிர்ச்சி இன்மையால் எத்தனை பேருக்கு துன்பம்" என்றது காக்கை.
குருவி மன்னிப்புக் கேட்டது. காக்கை முத்தை தந்தது. குருவி முத்தை வைத்து விளையாடியது.
இந்திய வரலாற்று ஆசிரியர்களில் தலைசிறந்தவரான ரொமிலா தாப்பர் சொன்ன கதை இது. அவரது ஆய்வின் போது கிடைத்த தொன்மக் கதை இது.