- · 0 friends
லட்டு
ரத்தினகிரியை ஆண்ட ரத்தினசேனன் ஒரு பெரிய விருந்து அளித்தான். அப்போது பொழுதைக் கழிக்கத் தன் பக்கத்திலேயே தன் விதூஷகனையும் (அவை விகடகவி) சாப்பிட உட்கார வைத்துக்கொண்டான்.
விருந்தில் லட்டு பரிமாறப்பட்டது. பரிமாறுபவர் தவறுதலாக விதூஷகன் இலையில் மட்டும் லட்டு வைக்க மறந்துவிட்டார். தனக்கு லட்டு இல்லை என்பதைக் கண்ட விதூஷகன், அரசனிடம் தந்திரமாக ஒரு கேள்வி கேட்டான்.
"அரசே, திடீரென இடி இடித்து உங்கள் எல்லோர் தலை மீதும் விழுந்தால் என்ன செய்வீர்களாம்?" என்று கேட்டான்.
அரசன் சிரித்துக்கொண்டே, "எல்லோர் தலையிலும் விழும் இடி உன் மீது மட்டும் விழாதா?" என்று கேட்டான்.
அதற்கு விதூஷகன், "விழாது. நானே ஒரு தனிப்பிறவி. பாருங்களேன்... உங்கள் எல்லோர் இலையிலும் லட்டு விழுந்தது, ஆனால் என் இலையில் மட்டும் விழவில்லையே!" என்றான்.
விதூஷகனின் இந்தச் சமயோசித பதிலைக் கேட்டு ரசித்த அரசன், சிரித்துக்கொண்டே அவனுக்கும் லட்டு கொண்டு வந்து தரும்படி உத்தரவிட்டான்.