கனடாவில் கப்பம் கோரல்களுக்கு இந்திய மாணவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களா?
குற்றக் குழுக்கள் தெற்காசிய சமூகங்களை இலக்காகக் கொண்டு நடத்தும் மிரட்டல் வசூல் நடவடிக்கைகளில் இந்திய மாணவர்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கனடாவின் நிதி நுண்ணறிவு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய சிறப்பு அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் பண பரிவர்த்தனை நிறுவனங்கள் மிரட்டல் சம்பந்தப்பட்ட பணப்பரிவர்த்தனைகளை அடையாளம் காண பல்வேறு எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் ஆண்டுதோறும் வங்கிகள், கடன் சங்கங்கள், பங்குச் சந்தை நிறுவனங்கள், பண பரிமாற்ற சேவைகள், நிலமூலதன முகவர்கள் மற்றும் கேசினோக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பெறப்படும் கோடிக்கணக்கான தரவுகளை ஆய்வு செய்து பணமோசடி தொடர்பான தகவல்களை கண்டறிகிறது.
பின்னர், இந்த தகவல்கள் கனடிய பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளுக்கு பகிரப்படுகின்றன.
2026ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 100க்கும் மேற்பட்ட மிரட்டல் தொடர்பான நிதி நுண்ணறிவு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது கடந்த இரண்டு ஆண்டுகளை விட அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தகவல்களில் 300க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் 63,000க்கும் அதிகமான நிதி பரிவர்த்தனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த மிரட்டல் நடவடிக்கைகள் தற்போது தனிப்பட்ட சம்பவங்களை தாண்டி, மாகாணங்களைக் கடந்து ஒருங்கிணைக்கப்படும் “தொடர்ச்சியான அழுத்த முயற்சி” ஆக மாறியுள்ளதாகவும், குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பர்ட்டா, மானிடோபா மற்றும் ஒண்டாரியோ மாகாணங்களில் அதிகமாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.