·   ·  319 news
  •  ·  0 friends

கனடாவில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஸ்மித்ஸ் பால்ஸ் அருகே நெடுஞ்சாலை 15 இல் இடம்பெற்ற மூன்று வாகன விபத்தில், 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளனர்.

காவல்துறையின் அறிக்கையின்படி, லோம்பார்டி பகுதியில் உள்ள கவுண்டி சாலை 1 மற்றும் கவுண்டி சாலை 5 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலையில் மாலை 5 மணியளவில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் ஆகியவை ஒன்றோடொன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான கார்களில் ஒன்றை ஓட்டிச் சென்ற 34 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது காரில் பயணித்த சிறுவன் ஒருவன் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், 'ஆர்ஞ்ச்' அவசர வான்வழி ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்தின் போது அந்த ஆம்புலன்ஸில் நோயாளிகள் யாரும் இருக்கவில்லை. எனினும், அதில் பயணித்த ஓட்டுநரும் மற்றொரு நபரும் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய மூன்றாவது காரில் ஓட்டுநர் மட்டுமே இருந்துள்ளார். அவர் லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த பயங்கர விபத்தை அடுத்து, அப்பகுதியூடான நெடுஞ்சாலை பல மணி நேரம் மூடப்பட்டு, பின்னர் மீண்டும் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டது. இவ்விபத்து குறித்து ஒண்டாரியோ மாகாண காவல்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான தகவல்களோ அல்லது விபத்து நடந்த இடத்தின் வீடியோ காட்சிகளோ யாரிடமாவது இருந்தால், உடனடியாக லீட்ஸ் கவுண்டி காவல்துறையை 1-888-310-1122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • 22
  • More
Comments (0)
Login or Join to comment.