ஆந்திர முன்னாள் முதல்வர் காலமானார்
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில், என்.டி.ராமாராவின் ஆட்சியை கவிழ்த்து முதல்வரான, நாதள்ள பாஸ்கர் ராவ் (90) நேற்று காலமானார்.
வழக்கறிஞரான நாதள்ள பாஸ்கர் ராவ், காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1978-ல் எம்எல்ஏ ஆனார். இதையடுத்து சென்னா ரெட்டி அமைச்சரவையில் இடம் பிடித்தார். 1982-ல் என்.டி.ராமாராவ் தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி உருவானதில் முக்கியப் பங்கு வகித்தார். 1983-ல் ஆந்திர முதல்வராக என்.டி.ராமாராவ் பதவியேற்றார். அப்போது பாஸ்கர் ராவ் நிதி அமைச்சரானார். 1984-ல் என்டிஆர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
அப்போது அவரது ஆட்சியை கவிழ்த்து, ஆகஸ்ட் 16, 1984-ல் ஆந்திர முதல்வரானார். இதற்கிடையில் நாடு திரும்பிய என்.டி.ஆர், நீதி கேட்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து பாஸ்கர் ராவ், ஒரு மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வராக என்டிஆர் மீண்டும் பதவியேற்றார். நாதள்ள பாஸ்கர் ராவ், 1998-ல் காங்கிரஸ் எம்பியாக கம்மம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ல் பாஜகவில் இணைந்தார்.
பாஸ்கர் ராவ் சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். இவரது மகன் நாதள்ள மனோகர், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்து, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் கூட்டணி அரசில் சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். பாஸ்கர் ராவின் இறுதிச் சடங்குகள் இன்று ஹைதராபாத் பஞ்சகுட்டா மயானத்தில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.