கனடாவில் வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள்
கனடாவின் ஹமில்டன் நகரில் திருடப்பட்ட வாகனம் ஒன்றை அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் ஓட்டிய சம்பவத்தில் 12 வயது சிறுவன் உட்பட மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நகரின் கிழக்குப் பகுதியில் முகமூடி அணிந்த மூவர் இருந்த சந்தேகத்திற்கிடமான வாகனம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாக ஹாமில்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள், அந்த வாகனம் முன்பே திருடப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது என உறுதிப்படுத்தினர். பின்னர் அந்த வாகனம் ஆபத்தான முறையில் ஓட்டப்பட்டு வருவதை பொலிஸார் கண்காணித்தனர்.
அதிக வேகத்தில் பயணம் செய்ததுடன், பாதுகாப்பற்ற வழித்தட மாற்றங்கள், போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் கடத்தல், மேலும் “எதிர்-கண்காணிப்பு” (counter-surveillance) முறையில் ஓட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குறுகிய நேரத்திலேயே பொலிஸார் வாகனத்தை பின்தொடர்வதை நிறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில், அந்த வாகனம் ஓட்டுனர் யாரும் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்கள் ஒரு கடையில் இருப்பது கண்டறியப்பட்டது. பொலிஸார் கடைக்குள் நுழைந்து எந்தவித சிக்கலும் இல்லாமல் மூவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நேரத்தில், மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடத் தயாராக இருந்ததாகக் கருதப்படும் செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருவரிடம் திருடப்பட்ட வாகனத்துக்குச் சொந்தமான கீ-ஃபாப் (key fob) கைப்பற்றப்பட்டது. மேலும், மற்றொரு இளைஞர் மீது வாகனப் பயன்படுத்துதல் மற்றும் குறிப்பிட்ட நபர்களுடன் தொடர்பு கொள்ளுதல் தொடர்பான நீதிமன்ற விதிமுறைகள் அமலில் இருந்ததாகவும், அவருக்கு எதிராக நிலுவையில் இருந்த கைது வாரண்டுகளும் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் 15, 13 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் நகரில் இளைஞர் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை பிரதிபலிப்பதுடன், திருடப்பட்ட வாகனங்களுடன் தொடர்புடைய பொது பாதுகாப்பு ஆபத்துகளையும் வெளிப்படுத்துகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.