Feed Item
·
Added a news

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர்  வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ். கல்விக் கண்காட்சி - 2025 திறப்பு விழா சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலர் இளங்கோவனும், கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

முன்னைய காலத்தில் இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் குறிப்பிட்ட தொகையானவர்களுக்கு மாத்திரமே உயர்கல்விக்கான வாய்ப்பு இருந்தது. தற்போது அரச பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களும் உயர்கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பு பரந்தளவில் கிடைக்கின்றன. அதனைச் சரிவரப் பயன்படுத்தவேண்டும்

அத்துடன் எமது முயற்சி மற்றும் தேடலில்தான் உயர்கல்வித் தெரிவு இருக்கின்றது. பொருத்தமான துறைகளை தெரிவு செய்வதன் ஊடாக வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி ஆகும். இவ்வாறான கல்விக் கண்காட்சிகள் எமது மாகாண மாணவர்களின் எதிர்காலத்துக்கு சிறப்பானவை, இவை தொடரவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

ஆளுநரின் குறித்த கருத்தானது அந்தந்த மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களே நியமனம் செய்யப்பட வேண்டும் என இருக்கும் நடைமுறையை மாற்றி வடக்கில் தென்னிலங்கையை சேர்ந்தவர்களை நியமிக்க திரை மறைவில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதற்கான கட்டியமாகவே இருக்கின்றதென கல்விமான்களும் புத்திஜீவிகளும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 1158