ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியை பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிடுவார்!! இதை அவ்வப்போது கவனித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு இளைஞனுக்கோ ஒரே குறு குறுப்பு!!
அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது?! பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!! ஒருவேளை மாயாஜாலக் கண்ணாடியாக இருக்குமோ!! அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எதற்கும் அந்த பெரியவரிடமே விசாரித்து விடுவோம், என்ற முடிவிற்கு வந்தான்.
பெரியவரை நெருங்கினான்......
ஐயா... குரல் கேட்டுத் திரும்பிய பெரியவர், "என்ன தம்பி வேண்டும்", என்றார்.
"உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே"?
"ஆமாம்.... அதிலென்ன சந்தேகம்"?!
"அதில் என்ன தெரிகிறது"?
"நான் பார்த்தால் என் முகம் தெரியும்…. நீ பார்த்தால் உன் முகம் தெரியும்"!!
“அப்படியானால் சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடிதானே அது"?
“ஆமாம்"!!
“பிறகு ஏன் அதையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்"?!
பெரியவர் புன்னகைத்தார். "சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய"!!
"பாடமா?! கண்ணாடியிடமா!! அதனிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்"?!
"அப்படிக் கேள்"....
“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்கு கண்ணாடி போன்றவர்கள்!! எத்துணை ஆழமான உவமை இது"!!
"இந்த உவமையில் என்ன இருக்கிறது? எனக்கு ஒன்றும் புரியவில்லை"!!
“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படி சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது”.
“எப்படி"?
“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையை கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி அப்படியே காட்டுகிறது அல்லவா?
“ஆமாம்”
அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்தஅளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்!!
எதையும் மிகையாகவோ அல்லது ஜோடித்தோ சொல்லக்கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது!! இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!!
"அடுத்து…?”
“நீ கண்ணாடிக்கு முன்னால் நிற்கும் போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும். இல்லையா?”
“அட!! ஆமாம்"!!
“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!!”
"அப்புறம்"?
"ஒருவருடைய முகக் கறையை கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”
“இல்லை ஐயா!! மாறாக, அந்தக் கண்ணாடியை பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”
“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். "இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்"!!
“ஐரயா, அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா!! அப்பப்பா!! யோசித்தால் இன்னும் கூட பல விளக்கங்கள் கிடைக்கும் போலிருக்கிறதே!! என்று அந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு, அவரை வணங்கி சென்றான்....
நண்பர்களே...... இனி கண்ணாடி முன்னால் நின்று உங்கள் முகத்தை பார்க்கும்போது எல்லாம் இந்த அறிவுரைகளை மறந்து விடாதீர்கள்..
இவைகள் உங்களின் மனத்தை அலங்கரிக்கும், உங்களை மேலும் சிறந்தவராக பட்டைத் தீட்டும்!
- 444