Feed Item
Added article 

16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவே தன்னுடைய மீதமுள்ள வாழ்க்கையை தியாகம் செய்தார் என்றால் யாராவது நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நடித்த நடிகை சுலக்சனா, பாக்யராஜ் நடித்த ’தூறல் நின்னு போச்சு’ என்ற திரைப்படத்தில் தான் முதன் முதலில் அறிமுகமானார். அதன் பின் அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ’தூங்காதே தம்பி தூங்காதே’ என்ற படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தது ஒரு திருப்புமுனையை கொடுத்தது.

இதனை அடுத்து அவர் ரஜினியுடன் ’தம்பிக்கு எந்த ஊரு’ திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அதன்பின் அவருக்கு குறிப்பிடத்தக்க வேடம் கிடைக்காமல் இருந்த நிலையில் தான் ’சிந்து பைரவி’ படத்தில் ஒரு அருமையான கேரக்டரை கே.பாலச்சந்தர் அவருக்கு கொடுத்தார். அந்த படத்தின் மூலமாக மிகச் சிறந்த நடிகை என்று அனைவராலும் போற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சுலக்சனா இயக்குனர் கோபாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில் ஐந்தே ஆண்டுகளில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

தனது மூன்று குழந்தைகளுடன் விவாகரத்து பெரும்போது மிகவும் சிக்கலான நேரத்தில் சுலக்சனா இருந்தார். ஆனால் அவர் குழந்தைகளை பெரிய ஆளாக்க வேண்டும் என்பதற்காகவே தனது வாழ்க்கையை தியாகம் செய்தார். சின்ன சின்ன வேடம் கிடைத்தால் கூட அதில் கூட நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவருடைய இரண்டு மகன்கள் இன்று மிகப்பெரிய வேலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது மகன் இந்திய கப்பல் படையில் அதிகாரியாக உள்ளார். இரண்டாவது மகன் லண்டனில் ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரியாக உள்ளார். மூன்றாவது மகன் தற்போது படித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

எம்எஸ் விஸ்வநாதன் தனது மருமகளை மகள் போல் மிகவும் அன்புடன் தான் நடத்தினார். ஆனால் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் அவர்களுக்குடையே பிரிவு ஏற்பட்டதாகவும் இந்த பிரிவு எம்எஸ் விஸ்வநாதனை மிகவும் மன அழுத்தத்திற்கு உண்டாக்கியதாகவும் கூறப்படுகிறது.

சுலக்சனாவின் கணவர் கோபாலகிருஷ்ணன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் சுலக்சனா கடைசி வரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். தனது குழந்தைகளின் எதிர்காலம் காரணமாக அவர் திருமணம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்னரும் அவர் நடிப்பு தொழிலில் வந்த பணம் முழுவதுமே தனது மகன்களின் படிப்புக்காகவே செலவழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆர்யா நடித்த கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஒரு சிறு கேரக்டர் கிடைத்தது. ஆனால் அதன் பிறகு அவருக்கு சில கேரக்டர் கிடைத்த போதிலும் அவர் நடிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

தற்போது தனது மகன்களுடன் சந்தோஷமாக இருக்கும் சுலக்சனா, தனது மகன்கள் தான் தனக்கு எல்லாம் என்றும் அவர்களுக்காகவே தான் வாழ்ந்திருப்பதாகவும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • 262