- · 1 friends
-

பேராசை
இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாத அந்த முதிய தம்பதியினர் தங்களது 35 வது ஆண்டு திருமண விழாவை பிரம்மாண்டமாக இருந்த அந்த ஓட்டலில் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
பழைய காதல் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே உணவினை ருசித்த வேளையில் அவர்கள் அமர்ந்திருந்த டேபிளில் திடீரென சுண்டு விரல் உயரம் கொண்ட அழகிய ஒரு பெண் தேவதை தோன்றினாள்.
இருவரும் அதிர்ச்சியாய் அந்த தேவதையை பார்த்தனர். தேவதை அவர்களைப் பார்த்து புன்னகையுடன் பேசினாள்,
'பயப்படாதீர்கள்..! நான் உங்களின் அதிர்ஷ்ட தேவதை. இத்தனை ஆண்டு காலம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நீங்கள் வாழ்ந்ததைப் போல வாழ்ந்த தம்பதியினர் இந்த உலகத்தில் யாரும் கிடையாது.
அதனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். உங்களுக்கு ஆளுக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டுமோ கேளுங்கள்'
இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு சந்தோசம் தாங்க முடியாமல் அந்த முதிய பெண் தேவதையிடம் சொன்னாள்,
'இதோ என் அருகில் இருக்கும் என் காதல் கணவனோடு நான் உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் பொருளாதாரம் காரணமாக என்னால் அப்படி செய்ய முடியவில்லை.
அதனால் நான் என் கணவரோடு உலகம் முழுவதையும் சுற்றி வர வேண்டும். உன்னால் அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா?'
அந்தப் பெண் தேவதை புன்னகைத்துக் கொண்டே தன் கையில் இருந்த மந்திர குச்சியினால் காற்றில் துளாவினாள்.
மறு நிமிடம்...
உலகின் தலைசிறந்த சொகுசு கப்பலில் உலகத்தைச் சுற்றி வருவதற்கான இரண்டு டிக்கெட்டுகளும் செலவிற்கான தேவைக்கும் அதிகமான பணமும் அவர்கள் மேஜையில் இருந்தன.
அடுத்த நொடியில் அவர்கள் மூவரும் அந்த உல்லாச கப்பலின் மேல் தளத்தில் இருந்தார்கள். சுற்றிலும் இருந்த கடலை ரசித்துக் கொண்டே அந்த முதிய பெண்மணி தனது கனவு நனவாகிவிட்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.
அழகிய குட்டி தேவதை இப்பொழுது அவளின் கணவனிடம் திரும்பி
'உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்' என்றது.
ஒரு நிமிடம் யோசித்த முதிய கணவன் தேவதையிடம் சொன்னான்,
'என் வாழ்நாளில் யாருக்குமே கிடைக்காத ஒரு அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கிறது.
வயது முதிர்ந்த இந்த மனைவியுடன் உலகத்தை சுற்றி வருவதில் எனக்கு என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது?
எனக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை நான் தவற விட விரும்பவில்லை.
அதனால் என்னைவிட 30 வயது குறைவான பெண்ணுடன் இந்தக் கப்பலில் சொகுசு பயணம் மேற்கொண்டு உலகத்தை சுற்றி வர விரும்புகிறேன்.
அதனால் என்னோடு பயணிக்க என்னை விட 30 வயது குறைந்த பெண்ணை உடனே அனுப்பு'
அந்த முதிய கணவனின் பதிலால் அவனின் மனைவியும் தேவதையும் அதிர்ந்தார்கள்.
'இத்தனை ஆண்டு காலமாக என்னை காதலித்து வந்த நீங்கள் ஒரு நொடியில் உதறி தள்ளிவிட்டு இன்னொரு பெண்ணுடன்...
அதுவும் உங்களை விட முப்பது வயது குறைந்த இளம் பெண்ணுடன் சுற்ற உங்களுக்கு எப்படி மனம் வந்தது? தயவுசெய்து இந்த கோரிக்கையை மறுபரிசீலனை செய்து பாருங்கள்'
கண்ணீருடன் கணவனிடம் பேசிப் பார்த்தாள் அந்த மனைவி. அவன் மசியவில்லை.
'நான் உங்களுக்கு வரம் கொடுத்ததே நீங்கள் இருவரும் இணைபிரியாத தம்பதிகளாக இருக்கிறீர்கள் என்பதற்காகத்தான்.
இப்பொழுது நீயே அதை உடைத்து விட்டால் நான் எப்படி வரம் தர முடியும்? அதனால் மீண்டும் ஒருமுறை உன்னுடைய கோரிக்கையை மறுபரிசீலனை செய்து பார்'
செஞ்சி பார்த்தது தேவதை. அவன் தீர்க்கமாய் சொன்னான்,
'நான் சொன்னா சொன்னது தான். நீ பரிசளித்தபடி இந்த கப்பலில் உலகத்தை சுற்றிவர நான் தயார்.
ஆனால் கண்டிப்பாக என்னை விட 30 வயது குறைவான பெண் ஒருத்தி அந்த பயணத்தில் என்னோடு இருக்க வேண்டும்.
இனியும் ஒரு நொடி கூட யோசிக்காமல் சடார் என எனக்கு வந்த வரத்தை கொடு'
ஒரு நிமிடம் மௌனம் சாதித்து பெருமூச்சு விட்ட அந்த தேவதை காற்றினில் மந்திர குச்சியை ஆட்டிக்கொண்டே சொன்னாள்,
'சரி உன் இஷ்டப்படியே உனக்கு வரம் தருகிறேன். இந்த மந்திர குச்சியை தொடு'
தொட்ட மறு வினாடி அந்த அதிசயம் நிகழ்ந்தது.
அந்த 60 வயது முதியவன் 92 வயது முதியவன் ஆனான்.
அவனிடம் அந்த தேவதை சிரித்துக் கொண்டே சொல்லி மறைந்தது,
'நீ ஆசைப்பட்டது போல் உன் பக்கத்தில் உன்னை விட 30 வயது குறைந்த பெண் இருக்கிறாள். நீ ஆசைப்பட்டபடி அவளோடு சந்தோஷமாக டூரை என்ஜாய் பண்ணு'என்றது தேவதை.