அலுவலக வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த முரளி செல்போனின் சிணுங்கல் சத்தம் கேட்டு தலைநிமிர்ந்தான்.
செல்போனில் குடும்ப டாக்டர் முத்தையா அழைத்துக் கொண்டிருந்தார்.
எடுத்து ஹலோ என்றான். மறுமுனையில் டாக்டர் பேசினார்,
'குட்மார்னிங் முரளி. ஃப்ரீயா இருந்தா கொஞ்சம் ஹாஸ்பிடல் வரைக்கும் வர முடியுமா?'
'இதோ உடனே வர்றேன் டாக்டர்'
காரை எடுத்து கிளம்பினான். எதற்காக அழைத்திருப்பார் என மனதிற்குள் ஒரு பட்டிமன்றமே நடத்தி ஹாஸ்பிட்டலை சென்றடைந்தான்.
ஹாஸ்பிடலில் எதிர்பட்ட நர்சுகள் அனைவரும் அவனுக்கு வணக்கம் செலுத்தினர். மெலிதான புன்னகையோடு தலையை ஆட்டி யாருக்காகவும் காத்திராமல் நேரே மருத்துவரின் அறைக்குச் சென்றான்.
'வெல்கம் மிஸ்டர் முரளி! சேரை என் பக்கத்தில் போட்டு உட்காரு'
உட்கார்ந்தான். டாக்டர் மேஜை டிராயரைத் திறந்து ஒரு கவரை அவனிடம் நீட்டினார்.
'இதுல இருக்கிற பொண்ணு பேரு லதா. பக்கத்து கிராமத்தில இருக்கு. ரொம்ப ஏழ்மையான குடும்பம். நல்ல இடத்தில கட்டி கொடுக்க அவங்க அப்பாவுக்கு வசதி இல்லை.
உனக்கு இரண்டாம் தாரமா வாக்கப்பட சம்மதமான்னு கேட்டேன். அந்தப் பொண்ணு உட்பட எல்லோரும் சம்மதிச்சுட்டாங்க.
நீ போட்டோவை பார்த்து ஓகே சொன்னால் உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம்'
கவரைத் திறந்தான். சாயம் போன சுடிதாரோடு இளமையின் தலை வாசலில் நின்றிருந்த லதா அழகாக இருந்தாள்.
பார்த்ததுமே அவனின் இதயம் அவளை கவ்விக் கொண்டது. ஆனாலும் தயக்கமாக சொன்னான்,
'டாக்டர் என் குடும்ப வரலாறு முழுவதும் உங்களுக்கு தெரியும். மல்டி மில்லியனரான எனக்கு பணம் ஒரு விஷயமே கிடையாது.
என் மகன் பிறந்து வெறும் ஆறு மாசமே ஆன நிலையில் என்னுடைய முதல் மனைவி காவியா எதிர்பாராமல் விபத்தில் இறந்து போனது உங்களுக்கு தெரியும்.
அவளோட கல்லறை ஈரம் கூட இன்னும் காயலை. ஆனாலும் அடுத்த கல்யாணம் பண்ணச் சொல்லி எல்லோரும் என்னை வற்புறுத்துறீங்க.
நீங்க சொல்றது மாதிரி என்னை கவனிக்க ஆள் வேண்டியது இல்லை என்றாலும் என்னோட குழந்தையை கவனிக்க கண்டிப்பாக ஒரு பொண்ணு வேணும்.
அதனால இரண்டாவது கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன்னே வச்சுக்குவோம். இரண்டாவதா வர்றவா என் மகனை அவளோட மகன் மாதிரி கவனிச்சு நல்ல முறையில் வளர்ப்பான்றதுக்கு என்ன உத்தரவாதம் இருக்கு?
அதனால கொஞ்ச நாள் போகட்டும். என்னால என் மகனை வளர்க்க முடியலன்ற சூழ்நிலை வந்தால் கல்யாணத்தை பத்தி யோசிப்போம்'
சேரில் இருந்து எழ முயன்றவனை தடுத்தார் டாக்டர்.
'கொஞ்சம் இரு முரளி. உன் குழந்தை மேலே உனக்கு எவ்வளவு அன்பு இருக்கு, முதல் மனைவியை நீ எவ்வளவு நேசிச்சன்ற விவரமெல்லாம் எனக்குத் தெரியாதா?
உன்னோட குழந்தை வளர்ப்புல ஒரு சின்ன தவறு கூட நடக்காத மாதிரியான பொண்ணை உனக்கு தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு.
நான் உன்கிட்ட காட்டின பொண்ணு அழகா இருந்தாலும் ஆண்டவன் அவளுக்கு ஒரு பெரிய குறையை வச்சிருக்கான்.
பிறவியிலேயே அந்த பொண்ணுக்கு கர்ப்பப்பை கோளாறு இருக்கு. அந்த பொண்ணால வாழ்க்கையில கன்சீவ் ஆக முடியாது. அதனால உன் குழந்தையை அவ குழந்தை மாதிரி பார்த்துக்குவா. போன மாசம் தான் அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை நீக்கினேன்.
நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளுக்கு வாழ்க்கை கொடுத்தது மாதிரியும் இருக்கும். அவளுக்கும் வாழ்க்கையில ஒரு குழந்தைக்கு தாயா வாழ்ந்த ஒரு திருப்தியும் இருக்கும்.
உனக்கும் எந்த பயமும் வேண்டியதில்லை. கொஞ்சம் யோசிச்சு பார்'
குழப்பம் அவனது மூளைக்குள் குடைராட்டினம் சுத்த ஆரம்பித்தது. தொடர்ந்து டாக்டர் அரை மணி நேரம் அவனுக்கு மூளைச்சலவை செய்ததில் திருமணத்திற்கு சம்மதித்தான்.
ஒரு கோவிலில் வைத்து மிக எளிமையாக திருமணம் நடந்தது.
இரண்டாவது மனைவியாக வந்த லதா அவன் எதிர்பார்த்ததற்கு மேலாக அவனிடம் அன்பை கொட்டினாள். பெற்ற தாய்க்கும் மேலாகவே முரளியின் குழந்தைக்கு தாயாகவே மாறி நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கினாள்.
அவனை பார்க்கும் பொழுதெல்லாம் டாக்டர் சொன்னார்,
'ரொம்ப பயந்தியே முரளி! உன் வாழ்க்கை எப்படி ஜம்முன்னு போய்க்கிட்டு இருக்கு பார்த்தியா? லதாவோட தியாகம் உன்னுடைய பயம் எல்லாத்தையும் போக்கி வாழ்க்கையில் ஒரு பெரிய வசந்தத்தையே ஏற்படுத்திருச்சா?'
மௌனமாய் தலையை ஆட்டினான்.
ஆனாலும் ஒவ்வொரு முறையும் லதா முரளியிடமும் குழந்தையிடமும் அன்பு செலுத்தும் போது அவன் மனதிற்குள் ஒரு குரல் ஒன்று சொல்லியது,
'முரளி அந்த டாக்டர் சொல்வது போல் இவள் ஒன்றும் தியாகி அல்ல. சுயநலவாதி தான்.
கடவுள் இவளை வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பத்தில் பிறக்க வைத்திருக்காவிட்டாலும், குழந்தை பாக்கியமே இல்லை என்பது போல கர்ப்பப்பையில் கோளாறு ஏற்படுத்தி இருக்காவிட்டாலும் இவள் உன் மீதும் குழந்தை மீதும் அன்பு செலுத்தி இருக்க மாட்டாள்.
இவளுக்கு கர்ப்பப்பையில் கோளாறை வைத்து இறைவன் முதல் மனைவியை உன்னிடம் இருந்து பிடுங்கி உன் வாழ்க்கையில் அவன் செய்த கோளாறை சரி செய்ய இவளை அனுப்பி வைத்திருக்கிறான்.
இந்த கோளாறெல்லாம் இல்லை என்றால் இவளும் வேறு ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு குழந்தையை பெற்று அசல் தாயாக மாறி ஒரு பெண்ணிற்கான முழு வாழ்க்கையும் வாழ்ந்திருப்பாள்.
அரை வயிற்று கஞ்சிக்கே வழியில்லாத குடும்பத்தில் பிறந்து இப்போது ஆடம்பரமாக வாழ்ந்து ஒரு குழந்தைக்கு தாயாக மாறி அந்த தாய்மையையும் அனுபவித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு இந்த வாழ்க்கை நீ போட்ட பிச்சை. உண்மையில் நீ தான் தியாகி'
காலங்கள் உருண்டோடியது. குழந்தை வாலிபன் ஆனான். அவனுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து முடித்த கையோடு லதாவை புற்றுநோய் தாக்க எதிர்பாராமல் இறந்து போனாள்.
அவள் இறந்த சோகம் அவனை கொஞ்சம் கூட தாக்கவில்லை. குழந்தையை வளர்க்க கூலி வாங்குவதற்கு பதிலாக சுகபோக வாழ்வை அனுபவித்து இறந்திருக்கிறாள். இதில் அவளை உயர்த்தி பேசவோ பெருமைப்படுத்தவோ என்ன இருக்கிறது?
தேனிலவு சம்பிரதாயங்கள் முடிந்த பின் முரளியின் மகன் மனைவியோடு வெளிநாடு சென்ற பிறகு லதாவின் அறையை ஆட்களை கொண்டு சுத்தம் செய்ய ஆரம்பித்தான் முரளி.
வேலையாட்கள் கேட்டார்கள்,
'அம்மாவோட பொருள்களை எல்லாம் என்ன செய்ய முதலாளி?'
முரளி சொன்னான்,
'அதையெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அவளுடைய பொருள் என ஒன்று கூட இங்கே இருக்கக் கூடாது'
வேலையாட்கள் லதாவின் பொருட்களை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.
திடீரென அறைக்குள் ஏதோ ஒன்று கீழே விழுந்து கண்ணாடி சிதறும் சத்தம் கேட்டது.
அறைக்குள் ஓடிப் போய் பார்த்தான். சுவற்றில் மாட்டியிருந்த லதாவின் திருமண புகைப்படம் கீழே விழுந்து இருந்ததில் கண்ணாடி உடைந்து சிதறி கிடந்தது.
திருமணமாகி பதினைந்து வருடங்கள் கழித்து சுவற்றில் தம்பதியரின் புகைப்படம் மாட்டியே தீர வேண்டும் என அவனோடு செல்லமாய் சண்டை போட்டு இருவரும் சேர்ந்து இருப்பது போல் புகைப்படம் ஒன்றை எடுத்து அவளாகவே கடைக்குச் சென்று பழைய மாடலில் கண்ணாடி போட்ட பிரமில் சுவற்றில் தொங்க விட்டிருந்த படம்.
குனிந்து புகைப்படத்தை எடுத்தான். கீழே விழுந்ததில் புகைப்பட அட்டை தனியாக கழண்டு வந்தது. அந்த அட்டைக்கு பின்புறம் இருந்து மடித்து வைக்கப்பட்டு பழுப்பேறி போயிருந்த ஒரு வெள்ளை தாள் கீழே விழுந்தது.
எடுத்துப் படித்தான்.
'அன்புள்ள அத்தானுக்கு! எனக்கு திருமணம் ஆகுமோ ஆகாதோ என எனது அப்பாவும் அம்மாவும் பயந்து கொண்டிருந்த வேளையில் என் தகுதிக்கு மீறிய இடத்தில் இருந்த நீங்கள் என்னை திருமணம் செய்து எனக்கும் வாழ்வளித்து என் பெற்றோர் வயிற்றிலும் பாலை வார்த்தீர்கள்.
ஒரு சராசரி பெண்ணைப் போல எனக்கும் முதல் திருமணம் தான் நடக்க வேண்டும் என்கிற கனவு இருந்தது. ஆனால் எனது பெற்றோரின் நலனுக்காக அதை மாற்றிக் கொண்டேன்.
இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்டால் வாழ்க்கை வீணாகிவிடும் என்கிற பயமெல்லாம் உங்களுடைய அன்பினால் காணாமல் போய்விட்டது.
எனக்கு குழந்தை பிறந்தால் உங்கள் குழந்தையின் மீது அன்பு செலுத்தாமல் போய்விடுவேன் என்கிற பயம் உங்களுக்கு இருப்பதாக டாக்டர் சொன்னார்.
நீங்கள் அவருடைய குடும்ப நண்பர் என்பதனால் நான் கண்டிப்பாக உங்களை திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என டாக்டர் வற்புறுத்தினார்.
எனக்கு பெரிய அளவிற்கு படிப்பு அறிவு இல்லை. மனம் விட்டும் பேசும் படியாக தோழிகளும் கிடையாது. பிறந்ததிலிருந்து எனக்கென எந்த சுகத்தையும் அனுபவித்தது இல்லை. நான் விரும்பியது எதுவும் எனக்கு கிடைத்தது இல்லை. பிறருக்காகவே வாழ்ந்த நான் உங்களுக்காகவும், குழந்தைக்காகவும் வாழ முடிவெடுத்தேன்.
டாக்டர் திருமணத்திற்கு முன்பு உங்களிடம் சொல்லியது போல் எனக்கு கர்ப்பப்பையில் எந்த கோளாறும் கிடையாது.
நீங்கள் என்னை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்ததாக சொன்ன பிறகு நான் கர்ப்பம் ஆகாமல் இருக்க வேண்டும் என்றால் கர்ப்பப்பையை எடுக்க வேண்டுமென டாக்டர் சொன்னார்.
ஏழ்மை குடும்பத்தில் பிறக்க வைத்து என்னை இந்த சூழ்நிலையில் சிக்க வைத்த இறைவனை திட்டியபடியே மனதில் மிகுந்த வலியோடு அதற்கு சம்மதித்தேன்.
ஆனால் உங்களோடு வாழ ஆரம்பித்த பிறகு தான் என்னுடைய எண்ணமெல்லாம் எவ்வளவு தவறு என்று புரிந்தது. எந்த இறைவனை திட்டினேனோ அந்த இறைவன் அருளால் அன்பான கணவன், அன்பான மகன் கிடைத்தார்கள்.
ஒருவேளை எனக்கு முதல் திருமணம் நடந்து முறையாக குழந்தை பிறந்து இருந்தால் கூட என்னிடம் இவ்வளவு அன்பாக இருந்திருப்பார்களா என தெரியாது.
இந்த விஷயத்தை நான் உயிரோடு இருக்கிற காலம் வரைக்கும் உங்களிடம் சொல்ல கூடாது என டாக்டர் என்னும் சத்தியம் வாங்கி இருக்கிறார்.
ஆனாலும் ஒரு ரகசியத்தை உங்களிடம் இருந்து மறைத்து சாக நான் விரும்பவில்லை. அதனால் நடந்த உண்மைகளை தாளில் எழுதி இருக்கிறேன்.
என்றாவது ஒருநாள் இந்த தாள் உங்கள் கையில் சிக்கினால் உண்மை தெரியவரும். உங்களுக்கு இரண்டாம் தரமாக வாழ்க்கைப்பட மறுத்ததற்கும், கர்ப்பப்பையை எடுக்கும் பொழுது கணக்கு வழக்கு இல்லாமல் கவலைப்பட்டதற்கும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய பீரோவில் எனது முகூர்த்த பட்டு சேலைக்கு அடியில் டாக்டர் எனக்கு ஆபரேஷன் செய்து கர்ப்பப்பையை எடுத்த மருத்துவ சான்றிதழ் இருக்கிறது. அதைப் படித்துப் பார்த்தால் எனக்கு கர்ப்பப்பை கோளாறு இல்லை என்பது உங்களுக்கு தெரியும்.
இந்த விஷயம் நமது மகனுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்'
முரளி பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தான். பொருட்களை ஒதுக்கி கொண்டிருந்த வேற ஆட்கள் ஓடி வந்து 'என்ன முதலாளி' என்றனர்.
'லதாவின் பொருட்களை மீண்டும் அதே இடத்தில் வைத்து விடுங்கள். லதாவின் நினைவுகளையும் அவளின் தியாகங்களையும் சுமந்து கொண்டு நிற்கும் அந்த பொருட்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது' என்று கண்ணீரோடு சொன்னான்,
- 255