கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நடித்த அவரது நடிப்பு படத்தின் வெற்றிக்குக் காரணமானது.
பொறுத்தது போதும். பொங்கி எழு என்ற அவரது வசனம் இன்று வரை ட்ரெண்ட் ஆனது. தாய் சொல்லைத்தட்டாதே, தாயைக்காத்த தனயன், நீதிக்குப்பின் பாசம் என எம்ஜிஆரின் படங்களிலும் கண்ணாம்பா தனது நவரச நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கண்ணாம்பா எம்ஜிஆரை வைத்து தாலிபாக்கியம் என்ற படத்தைத் தயாரித்தார். படத்திற்கான படப்பிடிப்பு கர்நாடகாவில் நடத்தப்பட்டது. எம்ஜிஆர், சரோஜாதேவி, நம்பியார் நடித்துள்ளனர். ஒருநாள் தயாரிப்பாளர் தரப்பில் உள்ள மொத்த பணமும் திருடு போனது. என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார்.
தொழிலாளிகளுக்கும் சம்பளம் கொடுக்க முடியவில்லை. எம்ஜிஆருக்கு இந்தப் பிரச்சனை கொண்டு வரப்பட்டது. அவரும் எல்லா பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அனைவருக்கும் சம்பளமும் கொடுத்து உதவினார். இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்தநிலையில் தியாகராஜாநகரில் தனது வீட்டை விற்க முடிவு செய்த சூழலில் எம்ஜிஆர் நீங்கள் விற்க வேண்டாம். இறுதிவரை இந்தவீட்டில் தான் இருக்க வேண்டும் என்று அவருக்குக் கூற, அவரும் இருந்துள்ளார். அவர் இறந்த பிறகு தான் எம்ஜிஆர் அந்த வீட்டைப் பயன்படுத்திக் கொண்டார். அந்தக்காலத்தில் தமிழ்த்திரை உலகில் கே.பி.சுந்தராம்பாளுக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவிலேயே அதிகமாக சம்பளம் வாங்கிய ஒரே நடிகை கண்ணாம்பா தான். அப்போது இவருக்கு ஒரு படத்தில் நடிக்க சம்பளம் 85 ஆயிரம் ரூபாய். இவை அனைத்தையும் சொந்தப்படமாக தயாரித்து தோல்வி அடைந்த கண்ணாம்பா, 1964 மே 7ல் புற்றுநோயால் காலமானார்.
- 359