Feed Item
Added a post 

காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள்.

நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன்.

சற்று நேரத்தில் "முருகவேல்" என்று அழைப்பு வந்தது.

உள்ளே சென்றவுடன் சில கேள்விகள் கேட்டு விட்டு "உங்கள் பயோடேட்டாவில் வயது 40 என்று இருக்கே நிஜமா ?"

"ஆமாம் சார் உண்மை தான்."

"அப்படியா ..? எங்கள் நிறுவனத்தில் இளைஞர்களை தான் வேலைக்கு எடுக்கின்றோம். உங்கள் வயது 40 என்று சொல்றிங்க.. கொஞ்சம் யோசனை செய்ய வேண்டி இருக்கும் முருகவேல்" என்றார்கள்.

"பரவாயில்லை சார் நான் வேலை செய்ய தயாராக இருக்கிறேன்" என்று கூறினேன்.

மேலும் "இதற்கு முன் வேலை செய்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால் திடீர் என்று மூடிவிட்டார்கள். அதனால் வேறு வேலை தேடும் சூழ்நிலை உருவாகிவிட்டது சார்"..

அந்த அதிகாரி சற்று யோசிப்பது போல் பாவனை செய்து விட்டு . "முருகவேல் உங்கள் பயோடேட்டாவை கொடுத்து விட்டு செல்லுங்கள் தேவைப்படும்போது அழைக்கின்றோம்" என்றார்.

"மிக்க நன்றி சார்" என்று கூறி விட்டு வெளியே வந்தேன். இங்கும் வேலை இல்லை.

மனம் கனத்தது கூடவே தலையும் வலித்தது. பெரும்பாலான இடங்களில் வயதை காரணம் காட்டி தவிர்த்து விடுகிறார்கள்.

ஆண்டவா என்ன சோதனை...

அனைத்தும் நல்லபடியாக தான் போய்க்கொண்டு இருந்தது முன்பு வேலை செய்த நிறுவனம் மூடும் வரை.. அந்த வேலையை நம்பி வாங்கிய கடன்கள் கழுத்தை நெறிக்க தொடங்கியது..

ஒரே மகனின் படிப்பு செலவு , வீட்டுக்கு தேவையான செலவு மேலும்.. மேலும்.. ஐயனே ஈசனே எப்படி சமாளிக்க போகிறேன்.

தலை மேலும் வலித்தது. பேருந்துக்கு வைத்து இருக்கும் காசில் காபி சாப்பிட்டு நடந்து வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவு செய்து காபி சாப்பிட்டு நடக்க துவங்கினேன்.

ஆழ்ந்த சிந்தனையில் நடந்து செல்லும்போது ரோட்டின் ஓரத்தில் ஒரு தோல் பை அனாதையாக கிடந்தது.

சின்னதாக ஒரு சபலம் எடுத்து திறந்து பார்த்தேன் . குப்பென்று வியர்த்து கொட்டியது.

பையில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள்.. கை கால்கள் உதறல் எடுத்தது. இருப்பினும் எடுத்து வைத்து கொண்டேன்.

மனம் பலவிதமாக என்னுள் பேசியது. ஒரு பக்கம் எச்சரிக்கை செய்தது. அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் தோன்றியது.

ஆனாலும் கட்ட வேண்டிய கடன்களும் , குடும்ப செலவுகளும் கண் முன்னே நின்று பயமுறுத்தியது.

வீடு வந்து சேரும் வரை மனச்சத்தங்கள் ஏராளம் , உடல் முழுவதும் வியர்வை ஊற்றியது. வீட்டில் உள்ள அலமாரியில் பணத்தை பத்திரமாக வைத்தேன்.

வெளியே சென்று திரும்பிய மனைவி "என்னங்க ஒரு மாதிரியா இருக்கறிங்க" என கேட்டாள்.

"வள்ளி அந்த கதவை சாத்திட்டு உள்ளே வா" என்றேன்.

நடந்த விவரங்களை சொல்லி . "யாராவது கேட்பார்கள் என்று திரும்பி, திரும்பி பார்த்தேன் யாரும் வரவில்லை" , எனப் பொய் கூறினேன். பணத்தை எண்ணி பார்த்தேன் மொத்தமாக 12 லட்சம்.

"வள்ளி சில மாதங்கள் வேலை கிடைக்கும் வரை நமக்கு கவலை இல்லை. நம் செலவுக்கு இது போதும்" என்றேன்.

மனைவி அமைதியாக இருந்தாள். "ஏதாவது பேசு" என்றேன்.

"இந்த பணம் நமக்கு வேண்டாங்க" என்றாள் மனைவி.

"வள்ளி என்ன பேசுற நீ ஆண்டவனா பார்த்து தான் நமக்கு துன்பங்கள் தீர வழி காட்டி இருக்காரு"..

"உங்க அல்ப புத்திக்கு ஆண்டவன் மேல் பழிபோடாதீங்க" என்றாள்.

"வள்ளி எனக்கு இன்னும் வேலை கிடைக்கல கட்ட வேண்டிய கடன்களும் செலவுகளும் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பணம் நமக்கு எவ்வளவு உதவியாக இருக்குமே நினைத்து பார் வள்ளி".

"இன்னொருவர் பணத்தில் வாழ்வது தப்புங்க. அதுக்கு பதிலா இருவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கலாம்" என்றாள் மனைவி.

"அப்போ வீட்டு செலவுக்கு என்னதான் நான் செய்வேன்" என்று கோபமாய் குரலை உயர்த்த..

"ஆண்டவன் சோதிப்பாருங்க ஆனா கைவிடமாட்டார்." என்று கூறி டக்கென்று கழுத்திலிருந்த தாலியை கழற்றி, "இதை விற்று விடுங்கள் எனக்கு மஞ்சள் கயிறு போதும்" என்றாள்.

"வள்ளி.!"என அதிர்ந்து விட்டேன்.

"அடுத்தவங்க பணத்துல வயிற்றை நிரப்பிக் கொள்வதைவிட இது எவ்வளவோ மேலுங்க. இந்த பணம் யாருக்கு சொந்தமோ அவர்களிடம் கொடுத்து விட்டு தான் நீங்கள் வீட்டில் நுழைய வேண்டும்"... என்று ஓடி கதவை சாத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

மனைவியின் தாலி கையில் கனத்தது. பணப்பையில் ஆராய்ந்து பார்த்தேன் முகவரி இருந்தது.

அந்த பங்களாவுக்குள் நான் நுழைந்த போது கோயிலில் நுழைந்த உணர்வு. மெல்லிய ஓசையில் சிவனைப் பற்றி பாடல்கள்.

அழைப்பு மணியை அடித்தேன். நெற்றி நிறைய விபூதியுடன் ஒரு பெரியவர் வந்து பார்த்தார்.

நடந்த விவரங்களை அவரிடம் கூறி பணப்பையை கொடுத்தேன். மகிழ்ந்த அவர் உள்ளே அழைத்து சென்று குளிர்பானம் கொடுத்து உபசரித்தார்.

"தம்பி எனது நிறுவனத்தில் இருந்து காரில் வரும் போது பணப்பை தவறி விழுந்தது விட்டது. திரும்பி தேடி செல்லும் போது கிடைக்கவில்லை.

உங்களை போல் நல்லவர்களும் இருக்கிறார்கள் . அதான் தவறவிட்ட பணம் திரும்ப வந்து விட்டது" என்றபடி என்னை பற்றிய விவரங்களை கேட்டார்.

என்னுடைய சூழ்நிலை பற்றிய விவரங்களை கூறினேன்.

அப்படியே யோசித்து... " தம்பி கொஞ்சம் இருங்கள். இதோ ஒரு போன் செய்து விட்டு வருகிறேன்" என்று உள்ளே சென்றார்.

திரும்பி வந்தவர், "தம்பி என்னோட நிறுவனத்தில் வேலை செய்ய உங்களுக்கு விருப்பமா? அடுத்த வாரம் எங்கள் மேலாளர் ஓய்வு பெறுகிறார். அவரோட இடத்தில் யாரை நியமிப்பது என நினைத்து கொண்டு இருந்தேன்.

நீங்கள் ஏன் அந்த வேலையில் சேரக்கூடாது?

நீங்கள் நாளைக்கு சேர்ந்து நிறுவனத்தில் டிரைனிங் எடுங்கள். வேலைக்கான உத்தரவு கடிதம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடும்.

வேறு யாராவது உங்களுடைய சூழ்நிலையில் இருந்து இருந்தால் இந்த 12 லட்சம் பணம் திரும்ப வந்து இருக்காது.

இந்த வேலை உங்கள் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும். நான் கொடுக்கும் பரிசு" என்றார்.

"நமச்சிவாயா...!" என் கண்ணில் கண்ணீர். கண்ணீரில் ஆயிரம் நன்றிகள் என் மனைவி வள்ளிக்கு...

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ எவன். (குறள்)

மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?

  • 494