Feed Item
Added a post 

எம்ஜிஆர் அமைதியாக தன் அலுவலக அறைக்குள் அமர்ந்திருந்தார். ஆனால் அறைக்கு வெளியே பரபரப்பு நிலவியது.

எம்ஜிஆருக்கு நெருக்கமான சில அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

'சீக்கிரமாக சில பெயர்களைத் தயார் செய்து, அதை சி.எம். மிடம் கொடுக்க வேண்டும்.' அதுதான் அவர்களது பரபரப்புக்கான காரணம்.

1984.

கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

என்ன பெயர் வைப்பது அந்தப் பல்கலைக்கழகத்துக்கு ?

எத்தனையோ பெயர்களை யோசித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர். எதுவும் அவருக்குத் திருப்தி தரவில்லை.

உடனடியாக அதிகாரிகளை அழைத்தார். பல்கலைக்கழக விஷயத்தைச் சொல்லி, நல்லதொரு பெயரைத் தேர்வு செய்து சொல்லும்படி கேட்டிருந்தார்.

ஒரு வழியாக அதிகாரிகளின் ஆலோசனை முடிந்தது. முதல்வரின் அறைக்குள் மெல்ல நுழைந்தார்கள். அடுக்கடுக்காக தாங்கள் எழுதி வைத்திருந்த பெயர்கள் அடங்கிய காகிதத்தை, எம்ஜிஆர் கைகளில் பணிவுடன் கொடுத்தார்கள்.

ஔவையார் பெயர் வைக்கலாம் என ஒரு சிலர் சொல்லியிருந்தார்கள்.

சுதந்திரத்திற்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மை பெயரை வேறு சிலர் பரிந்துரைக்க,

இன்னும் சிலரோ எம்.ஜி.ஆரின் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

எல்லாவற்றையும் அமைதியாகப் படித்துப் பார்த்த எம்.ஜி.ஆர்., தீவிர யோசனைக்குப் பின் தெரிவு செய்து சொன்ன பெயர்...

அன்னை தெரசா !

எம்ஜிஆரைச் சுற்றியிருந்த அதிகாரிகள் அனைவரும் எதுவும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏனெனில் அதிகாரிகள் எழுதிக் கொடுத்த பட்டியலில் அந்தப் பெயர் இல்லை.

ஆம். எம்ஜிஆரின் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த பெயர்தான் அன்னை தெரசா !

இப்படித்தான் உருவானது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.

Mother Teresa Women's University !

விழா மேடையில் இந்தப் பெயரை எம்.ஜி.ஆர். அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள் !

பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா எழுந்து வந்து எம்.ஜி.ஆரை இறுகத் தழுவிக் கொண்டாராம்.

இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட,

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஃபரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை அன்போடு தழுவி நிற்க ...

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.

இந்த வேளையில் எம்.ஜி.ஆரின் அரசியல் வழிகாட்டியான அண்ணா அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது :

“நான் கைலி கட்டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ்துவன், திருநீறு அணியாத இந்து.”

அண்ணா சொன்ன இந்த வார்த்தைகளை, தன் வாழ்க்கைப் பாடமாக ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

இதை அறிந்த அன்னை தெரசா, அந்த விழா மேடையிலேயே எம்ஜிஆரை மகிழ்ச்சியோடு வாழ்த்தி, மன நிறைவோடு ஆசி வழங்கினார்.

மத வெறியை தவிர்ப்போம். மனித நேயம் காப்போம்.

  • 447