Feed Item
·
Added a news

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தத்தமது செலவின அறிக்கைகளைக் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அண்மையில் வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அனைத்து வேட்பாளர்களும், சுயேச்சை குழுக்களும், அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும்.  இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் இம்முறை பொதுத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக 759,210 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது

அவற்றில் 20,551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  அதன் காரணமாக இம்முறை பொதுத் தேர்தலில்  738,659 அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான தபால் மூல வாக்களிப்புப் படிவங்கள் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாரத்திற்குள் அவை விநியோகம் செய்யப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளன.

அதன்படி, பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், காவல் நிலையங்களில் இந்த மாதம் 30ஆம் திகதியும் அடுத்த மாதம் 4ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.

அத்துடன் ஏனைய அரச நிறுவனங்களிலும் இராணுவ முகாம்களிலும் அடுத்த மாதம் முதலாம் திகதியும் 4ஆம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக அடுத்த மாதம் 7ஆம் 8ஆம் திகதி வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

000

  • 572