Feed Item
·
Added a news

இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறு அனைத்து தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி பணிக்கு வரத் தவறினால், அனைத்து தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என்று இலங்கை தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் எச்சரித்துள்ளார்.

இலங்கை தொடருந்து நிலைய அதிபர் சங்கத்தின் தொழில்சார் நடவடிக்கைக்கு துணை நிலைய அதிபர்கள் சங்கமும் ஆதரவளிக்க தயாராகியுள்ளது.

இலங்கை முழுவதிலும் 172 உப நிலையங்கள் உள்ளதாகவும், இந்த தொழில்சார் நடவடிக்கை காரணமாக தொடருந்து நடவடிக்கைகளில் மேலும் பாதிப்புகள் ஏற்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேநேரம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கடமைக்கு சமுகம் அளித்த அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

நாடாளவிய ரீதியில் கடந்த இரண்டு நாட்களாக அரசாங்க ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அதனை தவிர்த்து கடமைக்கு சமூகமளித்த, நிறைவேற்று தரத்திற்கு உள்ளடங்காத அரசாங்க அதிகாரிகளுக்கு விசேட சம்பள உயர்வு, எதிர்கால பதவி உயர்வு மற்றும் விசேட பாராட்டுச் சான்றிதழ் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இது தொடர்பில் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்களுக்கு அறிவித்து அது தொடர்பான சுற்றறிக்கைகளை வெளியிடுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 469