Feed Item
·
Added a news

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பயன்பாட்டிலிருந்த தனது கடவுச்சீட்டை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர் தனது கடவுச்சீட்டை ஒப்படைத்துள்ளார்.

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துசெய்து உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

டயானா கமகே இலங்கைப் பிரஜை இல்லையென்பதால், அவர் தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதற்கமைய, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதை தடுத்து நீதிமன்றத்தினால் எழுத்தாணை கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே, டயானா கமகே வெளிநாடு செல்லவதற்கும் தடை விதித்து கொழும்பு பிரதம நீதவான் திலின கமகேவினால் கடந்த 9 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தார். அத்துடன் முறையற்ற விதத்தில் பதவியை பெற்றுக்கொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே அரசாங்கத்திற்கு சொந்தமான மூன்று உத்தியோகபூர்வ வாகனங்களையும் கடந்த 10ஆம் திகதி அதிகாரிகளிடம் கையளித்திருந்தார்.

இதேவேளை கடந்த 15 ஆம் திகதி டயனா கமகேவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஜந்து மணித்தியாலங்கள் வாக்குமூலமொன்றையும் பெற்றுக்கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கடந்த 16ஆம் திகதி சட்டமா அதிபரை சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில் அவரது கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

டயனா கமகேவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பலதரப்பட்ட ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

  • 421