Feed Item
·
Added a post

எட்டுத் தொகை நூல்களையும் பத்துப் பாட்டுகளையும் கொண்டது சங்க இலக்கியம். பழைய உரையாசிரியர்கள் இந்த இலக்கியத்தைச் ‘சான்றோர் செய்யுள்’ என்று குறிப்பிட்டார்கள். இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. இதில் உள்ள பாடல்கள் அகம் (உள்) புறம் (வெளி) என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது. சங்க இலக்கியம் இயற்கை இலக்கியமும் ஆகும். பல வகை விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள் யாவும் அதில் உள்ளன.

எட்டுத்தொகை

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை”.

நற்றிணை: இது ஒரு அக நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது. இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன. இவற்றில் 1 பாடல் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை (234). ஒரு பாடலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை (285). பாடல்கள் 8 – 13 வரிகள் கொண்டவை.

குறுந்தொகை: இது ஒரு அக நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது. இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன. பாடல்கள் 4 – 8 வரிகள் கொண்டவை.

ஐங்குறுநூறு: இது ஒரு அக நூல். ஐந்து புலவர்களால் எழுதப்பட்டது. இதில் மொத்தம் 500 பாடல்கள் உள்ளன. குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகிய ஒவ்வொரு திணையிலும் நூறு பாடல்கள் கொண்டது. ஓரம்போகியார் மருதத் திணைப் பாடல்களையும், அம்மூவனார் நெய்தற் திணைப் பாடல்களையும், கபிலர் குறிஞ்சித் திணைப் பாடல்களையும், ஓதலாந்தையார் பாலைத் திணைப் பாடல்களையும், பேயனார் முல்லைத் திணைப் பாடல்களையும் பாடியுள்ளனர். இந்த நூலில் 2 பாடல்கள் நமக்குக் கிடைக்கவில்லை (129,130) . பாடல்கள் 3 – 6 வரிகள் கொண்டவை .

பதிற்றுப்பத்து: இது ஒரு புற நூல். சேர மன்னர்களுக்காக எழுதப்பட்ட நூல். பத்து மன்னர்களுக்காக, ஆளுக்கு 10 பாடல்கள் எழுதப்பட்டன. ஆனால் 80 பாடல்கள் தான் நமக்குக் கிடைத்துள்ளன. பாடல்கள் 8-56 வரிகள் கொண்டவை.

பரிபாடல்: இது அகமும் புறமும் கொண்ட நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது. பாடல்கள் முருகனுக்கும், திருமாலுக்கும், வைகை நதிக்கும் எழுதப்பட்டன. மொத்தம் 70 பாடல்கள் எழுதப்பட்டன. நமக்குக் கிடைத்தது 22 பாடல்கள். பாடல்கள் 32 – 140 வரிகள் கொண்டவை.

கலித்தொகை: இது ஒரு அக நூல். ஐந்து புலவர்களால் எழுதப்பட்டது. இதில் மொத்தம் 150 பாடல்கள் உள்ளன. பாடல்கள் 11 – 80 வரிகள் கொண்டவை. ஆயர் குடியினரின் ஏறு தழுவுதல் பற்றிய விவரங்கள் இந்த நூலில் மட்டுமே உள்ளன.

அகநானூறு: இது ஒரு அக நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது. இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன. பாடல்கள் 13 – 31 வரிகள் கொண்டவை. மொத்தம் 200 பாடல்கள் பாலைத் திணையிலும், 80 பாடல்கள் குறிஞ்சித் திணையிலும், 40 பாடல்கள் முல்லைத் திணையிலும், 40 பாடல்கள் நெய்தற் திணையிலும், 40 பாடல்கள் மருதத் திணையிலும் உள்ளன.

புறநானூறு: இது ஒரு புற நூல். பல புலவர்களால் எழுதப்பட்டது. இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன. பாடல்கள் 4 – 40 வரிகள் கொண்டவை. மூவேந்தர், குறு நிலமன்னர், பாணர், புலவர், விறலியர், கொடை, மறம், வீரர்கள், நாடு, மலை, போர், வீரத்தாய்மார்கள், இறந்த மன்னர்களின் புகழைப் பாடுதல், வாழ்க்கையின் நிலையாமை, மன்னர்க்குப் பெண் தர மறுத்தல் என்று பல செய்திகள் இதில் உள்ளன. மேலும், பரணர், ஔவையார், கோவூர் கிழார், மாங்குடி கிழார் போன்ற பெரும் புலவர்கள் தங்களை பாணர்களாக பாவித்து பாடும் 32 பாடல்கள் உள்ளன.

  • 338