Feed Item
Added article 

கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்

சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கலக்கிய நடிகை பிந்துகோஷ் கடைசி காலத்தில் தனது உடல்நல குறைவு காரணமாக வறுமையில் வாடி உள்ளார் என்பது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகமாக உள்ளது.

குண்டான உருவம், காமெடி நடிப்பு, குழந்தைத்தனமான சிரிப்பு மற்றும் வசனம் ஆகியவை தான் பிந்துகோஷ் . இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கமல்ஹாசன் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குரூப் டான்ஸ் ஆக நடனமாடி உள்ளார். அதன் பின் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக பிந்துகோஷ் நடித்தார்

இந்த நிலையில் கங்கை அமரன் இயக்கத்தில் பிரபு நடிப்பில் உருவான கோழி கூவுது என்ற திரைப்படத்தில் தான் காமெடி நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அவரது காமெடி சூப்பராக எடுபட்டதையடுத்து பல திரைப்படங்களில் அவர் தொடர்ச்சியாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார்.

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன், பிரபு, விஜயகாந்த், உள்ளிட்டவர்களின் படங்களில் பிந்துகோஷ் நடித்தார். இவரது காமெடி காட்சிகள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக உருவங்கள் மாறலாம், தூங்காதே தம்பி தூங்காதே, சூரக்கோட்டை சிங்கக்குட்டி, ஓசை, கொம்பேறிமூக்கன், நீதியின் நிழல், நவக்கிரக நாயகி உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.

விஜயகாந்த் நடித்த வெள்ளை புறா ஒன்று என்ற திரைப்படத்தில் பிந்துகோஷ், லூஸ் மோகனுடன் இணைந்து நடித்திருப்பார். லூசு மோகன் மிகவும் ஒல்லியான உடல்வாகுவாகவும் பிந்துகோஸ் குண்டான உடல்வாகு கொண்டவராக இருக்கும் நிலையில் இந்த ஜோடியை பார்த்து பலர் ஆச்சரியமடைந்தனர். அதுமட்டுமின்றி இந்த படத்தில் லூஸ் மோகன் பிந்துகோஸ் ஆகிய இருவருக்கும் ஒரு டூயட் பாடல் உண்டு. அந்த பாடல் தான் பொண்ணுன்னா பொண்ணு எம்மாம் பெரிய பொண்ணு என்ற பாடல். அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

நடிகை பிந்துகோஷ் திரையுலகில் உச்சத்தில் இருந்த போது சென்னை தசரதபுரத்தில் பங்களா போன்ற வீட்டை வாங்கினார். வீட்டு வேலை, சமையல் வேலை என தனித்தனியாக நான்கு வேலையாட்கள் அவரிடம் வேலை பார்த்தனர், அவர் ஆசை ஆசையாய் 10 நாய்களை வளர்த்தார். பங்களா, கார் என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தவருக்கு திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டது.

தைராய்டு உள்பட பல நோய்கள் அவருக்கு இருந்ததால் அவரது சினிமா வாய்ப்பு குறைந்து போனது. ஒரு கட்டத்தில் சம்பாதித்த சொத்து எல்லாம் சிகிச்சைக்காகவே செலவழித்தார். ஒரு நாளைக்கு 16 மாத்திரைகளை அவர் சாப்பிடதாகவும் அந்த மாத்திரைகளால் சைட் எஃபெக்ட் காரணமாக மேலும் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் கூறப்பட்டது.

ஒரு கட்டத்தில் சிகிச்சைக்கே பணம் இல்லாமல் வீடு கார் எல்லாவற்றையும் விற்றுவிட்டு ஒரு சிறிய வாடகை வீட்டில் இருந்தார். அவரது வறுமை நிலையை கேள்விப்பட்ட விஷால் அவருக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருகிறார். அது மட்டும் இன்றி அவரது நடிகர் சங்க உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில் ஆயுள் காலத்திற்கு புதுப்பிக்க அவர் தான் உதவினார்.

இந்த நிலையில் நடிகை பிந்துபோஸ் இறந்துவிட்டதாக கூட வதந்தி வந்தது. ஆனால் ஆனந்த விகடனில் வந்த அவரது பரிதாபமான பேட்டி தான் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை உறுதி செய்தது. நடிகை பிந்துகோஷ் மற்றும் கோவை சரளா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள் அதனால் கோவை சரளா அவ்வப்போது வந்து பிந்துகோஷை நேரில் பார்த்து அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு செல்வார்.

தன்னுடன் நடித்த எந்த நடிகரும் தன்னை வந்து பார்க்கவில்லை என்றும் விஷால் கோவை சரளா உள்பட ஒரு சிலர் மட்டுமே அவ்வப்போது வந்து போவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல பெரிய நடிகர்களுடன் நடித்த போது தனக்கு நினைத்துப் பார்க்க முடியாத சந்தோஷம் இருக்கும்.

இப்படி எல்லாம் நடித்த தன்னால் தற்போது எழுந்து கூட நிற்க முடியவில்லை என்று வருத்தத்தில் இருப்பதாகவும் இப்போது கூட எனக்கு உடல் நலம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்றும் ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருந்தார். நடிகை பிந்து கோஷுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் தற்போது இருவருமே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடன இயக்குனர்களாக உள்ளனர்.

  • 783