பட அதிபர் சின்னப்ப தேவர் சிறு வயதிலிருந்தே தெய்வ நம்பிகை யுள்ளவர்.சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர்.மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்க்கையில் கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது.அப்போதும் அவர் நாணயத்தை நேர்மையையும் விட்டதில்லை.
குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலைபார்த்தார்.அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும்.
அடிக்கடி கோவைக்குப் பத்து மைலுக்கு அப்பாலிருக்கும் மருதமலைக்குப் போய் ‘முருகா!, முருகா!’ என்று மனம் உருக வேண்டுவார் அந்தக் கோவிலோ அப்போது ஜன நடமாட்டமில்லாத காலம்
வெற்றிலை பாக்குக் கடையில் அவருக்கு ஆறு ரூபாய் வரை கடனாகிவிட்டது. கடைக்காரன் அவர் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கினான்; அந்தக் கடையிருக்கும் பக்கமே போக முடியாதபடி அவதிப்பட்டார்.கடைக்காரன் கோபித்துக் கொண்ட அன்று இரவு. அந்த மருதமலைக் கோவிலில் போய் உட்கார்ந்து கொண்டு அழுதார்: “முருகா! காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டார்.நள்ளிரவில், காடுகள் நிறைந்த அந்த மலையைவிட்டு இறங்கினார்.
வழியில் ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்தது. அதை காலால் உதைத்துக்கொண்டே நகர்ந்தார்.கொஞ்சதூரம் வந்ததும் என்ன தோன்றிற்றோ?அந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தார்உள்ளே இரண்டு சிகரட்டுகளும்,பத்து ரூபாய் நோட்டும் இருந்தன.
அப்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?“நல்லவனாக வாழ்ந்தோம் தெய்வத்தைநம்பினோம்; தெய்வம் கைவிடவில்லை” என்று தானே எண்ணியிருக்கும்!அந்த முருகன் அவரை வாழ வைத்தான்.ஒவ்வொருநாளும், “முருகா! முருகா! ” என்று வணங்குவார்
“தனக்கு நஷ்டம் வந்தாலும் பிறருக்கு நஷ்டம் வரக்கூடாது” என்று தொழில் புரிகிறார்.அதனால், அவர் நாளுக்குநாள் செழித்தோங்குகினார்
----கவிஞர் கண்ணதாசன்