Feed Item
·
Added a post

குபேர பகவானுக்குரிய கிழமையாக திகழ்வது வியாழக்கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை ஐந்து முப்பது மணிக்கு மேல் குபேர பூஜை செய்யும் வழக்கத்தை வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் செய்யக்கூடிய வியாபாரமும் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த குபேர பகவானுக்குரிய பூஜையை செய்வதற்கு பலவிதமான வழிமுறைகள் இருந்தாலும் மிகவும் எளிதில் குபேர தீபத்தை ஏற்றும் முறையும் இருக்கிறது.

அமாவாசை முடிந்து வரக்கூடிய மூன்றாவது நாளை தான் மூன்றாம் பிறை தரிசனம் செய்வதற்குரிய நாள் என்று கூறுகிறோம். அந்த நாளில் நாம் என்ன செய்தாலும் அது பல மடங்கு வளரும் பெருகும் என்று பொருள்படும். அப்படிப்பட்ட ஆனி மாதத்தின் மூன்றாம் பிறை வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. வியாழக்கிழமை என்பது குபேர பகவானுக்குரிய கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும்.

அப்படிப்பட்ட மூன்றாம் பிறையோடு சேர்ந்து வரக்கூடிய வியாழக்கிழமை அன்று நாம் மாலை 6:14 மணியிலிருந்து 7:30 மணி வரை ஒரு தீபத்தை ஏற்றி குபேர பகவானை வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் குபேர பகவானின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றலாம். குபேர பகவானின் படம் இல்லை என்பவர்கள் மகாலட்சுமிக்கு முன்பாகவும் இந்த தீபத்தை ஏற்றலாம். எந்த விளக்கை பயன்படுத்தி வேண்டுமானாலும் இந்த தீபத்தை நாம் ஏற்றலாம்.

ஆனால் அந்த விளக்கிற்கு 5 எண்ணிக்கையில் மஞ்சள் குங்குமம் வைத்திருக்க வேண்டும். ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்து அதற்கு மேல் வாசனை மிகுந்த மலர்களை பரப்பி அந்த மலர்களுக்கு நடுவே ஒரு விளக்கை வைத்து அந்த விளக்கில் சுத்தமான நெய்யை ஊற்றி மஞ்சள் நிற திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபம் வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். ஏதாவது ஒரு இனிப்பு பொருளை இந்த தீபத்திற்கு முன்பாக நெய்வேத்தியமாக வைத்துவிட்டு “ஓம் குபேர பகவானே சரணம் சரணம்” என்னும் மந்திரத்தை 54 முறை கூற வேண்டும். இப்படி ஏழு முப்பது மணி வரை இந்த தீபத்தை எரிய விட்டு இந்த முறையில் வழிபாடு செய்யும்பொழுது குபேர பகவானின் அருளால் நமக்கு தேவையான பண வரவு ஏற்படும். மேலும் கடன் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய பணமும் வந்து சேரும்.

முழு நம்பிக்கையோடு குபேர பகவானை நினைத்து இந்த நேரத்தில் ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து குபேர பகவானை வழிபாடு செய்ய அவரின் அருளால் நம்முடைய பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியடையும்.

  • 389