பள்ளிக்கூடங்களை திறந்தால் மட்டும் போதாதது. அவற்றின் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கும் அவர்களுக்குக் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் வேலை நாட்களை 180 லிருந்து 200 நாட்களாக உயர்த்தினார். இதன் வாயிலாக மாணவர்களின் கல்வி நலன் மேம்படும் என இதைச் செய்தார். அதோடு பள்ளிகளுக்கு விடப்படும் தேவையற்ற விடுமுறைகளும் குறைக்கப்பட்டன.
பள்ளிகளின் வேலை நாட்களை உயர்த்தியதோடு ஆசியர்களுக்கான சமூக நலத்திட்டங்களையும் அறிமுகம் செய்தார் காமராஜர். ஆசிரியர்களுக்கு பிராவிடண்ட் பண்ட், இன்சூரன்ஸ், ஓய்வூதியம் ஆகிய மூவகை சலுகை அளிக்கும் திட்டத்தை வழங்க உத்தரவிட்டார். 1955இல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் கிடைத்த இந்தப் பலன்களை 1958 முதல் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்தார். அதன் பின்னர் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. கல்விக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அனைத்து விதமான சலுகைகளும் கிடைக்கும் போது அவர்களால் மாணவர்களுக்கு சிறப்பான கற்றல் செயல்பாடுகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கையை காமராஜர் பெற்றிருந்தார்.
தொடக்கக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்தினார். அவர்களின் பிள்ளைகள் இலவச கல்வி பெறுவதற்கு வசதி செய்தார். அரசாங்க ஊழியர்களின் பிள்ளைகளுக்கு சம்பளச் சலுகை அளித்தார். 100 ரூபாய் வருமானத்திற்கு குறைந்தவர்களின் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது.