மங்கோலிய மாவீரர் செங்கிஸ்கான் ஒருநாள் வேட்டைக்குச் சென்றார். செங்கிஸ்கான் தனது கரத்தில் ஒரு ராஜாளியை ஏந்தி இருந்தார். அதிக தூரம் நடந்து சென்றதால் களைப்பு ஏற்பட்டது. தாகம் எடுத்தது அப்போது ஒரு பாறையிலிருந்து நூலிழை போல் தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது
ஒரு குவளையை எடுத்துக் கொண்டு நீர் ஒழுகும் இடத்திற்கு சென்று நீரைப் பருகச் சென்றார். ராஜாளி வேகமாகப் பாய்ந்து சென்று குவளையைத் தட்டி விட்டது. மீண்டும் மீண்டும் வௌ்ளிக் குவளையை ராஜாளி தட்டி விட்டது.
தாகம் மற்றும் ராஜாளியின் அடாவடி இந்த இரண்டாலும் செங்கிஸ்கானுக்கு அளவற்ற ஆத்திரம் பொங்கியது. வாளால் ராஜாளியை வெட்டினார் ராஜாளி துடி துடித்துக் கொண்டிருந்தது.
மீண்டும் செங்கிஸ்கான் தண்ணீரைச் சேகரித்து அதை அருந்த முற்பட்டார் துடிதுடித்துக் கொண்டிருந்த ராஜாளி மறுபடியும் பாய்ந்து வந்து குவளையை தட்டி விட்டது. செங்கிஸ்கானுக்கு அடக்க முடியாத ஆத்திரம் பீறிட்டெழுந்தது.
ராஜாளியின் நெஞ்சை வாளால் குத்திக் கிழித்தார். இப்போது மேலிருந்து தண்ணீர் கசிவது நின்று விட்டது கீழே தண்ணீர் கசிவு வறண்டு விட்டாலும் மேலே ஒரளவு தண்ணீர் இருக்கக் கூடும் என்று செங்கிஸ்கான் அனுமானித்தார்.
குன்றின் வழியே அவர் மேலே ஏறினார். அங்கே ஒரு சிறிய தடாகம் தென்பட்டது. ஆனால்!, அந்தத் தடாகத்தின் மத்தியில் கொடிய நாகப் பாம்புகள் செத்துக் கிடந்தது. அந்தத் தண்ணீரை அருந்தியிருந்தால் தனது உயிர் பிரிந்திருக்கும் என்பதை செங்கிஸ்கான் உணர்ந்து கொண்டார்.
கீழே இறங்கி வந்த செங்கிஸ்கான், இறந்துக் கிடந்த ராஜாளியை இறுகத் தழுவிக் கொண்டார். இந்த ராஜாளிக்குத் தங்கச் சிலை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கட்டளையிட்டார்.
செங்கிஸ்கான் விருப்பதிற்கு ஏற்ப தங்க ராஜாளி சிலை வடிவமைக்கப்பட்டது. அதன் ஒரு சிறகில் ஒரு நண்பன் உனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தாலும் கூட, அவன் தொடர்ந்து உனது நண்பனாகவே இருக்கிறான் என்று பொறிக்கப்பட்டது.
மற்றொரு சிறகில், கோபம், ஆத்திரத்தோடு செய்கிற செயல் அழிவையே தரும் என்றும் பொறிக்கப்பட்டது.
நம்மில் பலருக்கு கோபம். ஆத்திரத்தில் அறிவும் வேலை செய்வதில்லை. ஆத்திரம் பெரும்பாலும் அழிவைத் தருகிறது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டம் என்று சொல்வார்கள். எதிலும் ஆத்திரமோ, அவசரமோ இல்லாமல் அறிவாக செயல்பட்டால் எதிலும் வெற்றி தான்.
அதேநேரம் அழிவிற்கு காரணம் கோபமும், ஆத்திரப்படுதலே ஆகும், கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டியவரின் சூழ்நிலையை சிந்தியுங்கள். கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்.
உடனே உங்கள் மனதை வேறு செயல்களில் திருப்புங்கள். அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள், நேரம் மேம்பாடு மற்றும் தன்னடக்கத்தை கடைப்பிடியுங்கள்.
செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள் கோபம், ஆத்திரம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்.
நீண்ட நாள் ஆனந்தமாக வாழ வேண்டுமானால் உறுதியாக நாம் கோபத்தைக் குறைத்தாக வேண்டும். ஆத்திரம் , கோபம் தவிர்த்து அன்புடனும், அமைதியுடனும் வாழ்ந்திட வேண்டும்.