பத்து வருடங்களுக்கு முன்நண்பரின் குடும்பத்தோடு சென்னையில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று வருவதற்காக Travels ல் ஒரு கார் book செய்தோம்!
கார் சொன்ன நேரத்தில் சரியாக வந்துவிட்டது!
டிரைவருக்கு 45 வயது இருக்கும்! கறுப்பாக இருந்தார், வெள்ளை நிறத்தில் சபாரி உடை அணிந்திருந்தார்!
பாதி தலை நரைத்திருந்தது! கிறிஸ்துவர்!
மிகவும் நேர்த்தியாக நிதானமாக வண்டி ஓட்டினார்! பழகுவதற்கும் மிகவும் அன்பான மனிதராக இருந்தார்!
கோயிலுக்கு சென்று திரும்பும் போது.... அடுத்த வாரம் வெளியூர் செல்லவேண்டியது இருக்கும் திரும்பிவர ஒரு நாள் ஆகும் உங்கள் முதலாளியிடம் சொல்கிறேன் நீங்களே வந்துவிடுங்கள் என்று சொன்னேன்!
இல்லை சார், சென்னையில் மட்டும் தான் நான் வருவேன், அதுவும் மாலை ஆறுமணிக்குள் முடிந்துவிடுகிற trip ஆக இருந்தால் மட்டும் தான் வருவேன் என்றார்!
ஏன் என்று கேட்டேன்!
அவர் சொன்ன விஷயங்கள் தான் இன்றுவரை அவரை எனக்கு ஞாபகப்படுத்தி வைத்திருக்கிறது!
அவரோடு பிறந்தவர்கள்
இரண்டு பேர்,
இரண்டு பேருமே அண்ணன்கள்!
வெளியூரிலும் வெளிநாட்டிலும் நல்ல வசதியோடு இருக்கிறார்கள்!
சிறுவயதிலேயே அப்பாவை இழந்தவர்!
மூன்று பிள்ளைகளையும் அம்மா தான் மிகவும் கஷ்டப்பட்டு
படிக்க வைத்திருக்கிறார்!
எல்லோரும் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்ட நிலையில் கடைசி மகனான இவர் தான் அம்மாவை பார்த்துக்கொண்டு இருக்கிறார்!
சில ஆண்டுகளாக அம்மாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு இரண்டு கைகளும் செயலிழந்துவிட்டு இருக்கிறது!
அப்போது முதல் இவர் தான் அம்மாவுக்கு உணவு ஊட்டுவது, குளிக்க வைப்பது, உடை மாற்றுவது என எல்லாவற்றையும் செய்திருக்கிறார்!
ஒவ்வொரு முறையும் அம்மாவை கழிவறைக்கு அழைத்து செல்லும்போதும், சுத்தம் செய்யும் போதும் அந்த அம்மா மிகவும் வேதனைப்படுவாராம்,
மூன்று பிள்ளைகளில் ஒன்று பெண்பிள்ளையாக இருந்தால் உனக்கு இந்த கஷ்டத்தை கொடுத்திருக்க மாட்டேன்!
ஒரு ஆண் பிள்ளையாக இருந்துகொண்டு இதுபோன்ற வேலைகளையெல்லாம் நீ செய்வதை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமாகவும் தர்மசங்கடமாகவும் இருப்பதாக வேதனைப்பட்டிருக்கிறார்!
அம்மா என்று வந்துவிட்ட பின் மகனென்ன மகளென்ன, உங்களுக்கு பெண்பிள்ளை பிறக்கவில்லை என்று நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்மா, அப்படி பிறந்திருந்தால் உங்களை பார்த்துக்கொள்ளக்கூடிய இந்த பாக்கியம் எனக்கு கிடைத்திருக்காது!
இது எல்லா மகனுக்கும் கிடைக்காது,
ஒரு வேளை எனக்கு இது போன்ற சூழ்நிலை உருவாகியிருந்தால் மகனாக இருந்தாலும் ஒரு ஆண் என்று தர்மசங்கடமாகவோ கூச்சமாகவோ உணர்ந்திருப்பீர்களா?!
இது என்னுடைய குழந்தை என்று எல்லாவற்றையும் நீங்கள் தானே செய்திருப்பீர்கள்! அதுபோல் தான் இதுவும், ஒரு நொடி கூட நான் தர்மசங்கடமாகவோ கஷ்டமாகவோ உணர்ந்ததில்லை அப்பாவை இழந்த பின்னும் எவ்வளவோ கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தீர்கள் அந்த கஷ்டத்திற்கு முன்னால் இதெல்லாம் பெரியவிஷயமே இல்லை,
நீங்களும் கஷ்டமாக உணராதீர்கள் என்று அம்மாவை சமாதானபடுத்தி இருக்கிறார்!
சம்பளம் கொடுத்து யாராவது ஒரு பெண்ணை வேலைக்கு வைத்துக்கொள்ளும்படி அண்ணன்கள் கூறியிருக்கிறார்கள்,
பணத்திற்காக யாரோ ஒரு பெண் வந்து வேலை செய்யும் போது தான் பாரமாக இருப்பதாக அம்மா உணரக்கூடும்,
அந்த உணர்வு கடைசி வரை வந்துவிடக்கூடாது அதற்காகத்தான் நானே எல்லா வேலைகளையும் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்!
பகலில் எதாவது அவசர தேவை என்றால் மனைவி பார்த்துக்கொள்கிறாராம்!
மற்றபடி இரவு மற்றும் காலை வேளைகளில் இவர்தான் எல்லா வேலைகளையும் ஒரு குழந்தைக்கு செய்வதை போல் செய்வாராம்,
தன் அண்ணன்கள் வசதியாக இருக்கிறார்கள், சிகிச்சைக்கு தேவையான பணத்தை அவ்வப்போது அனுப்புவார்கள், என்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறேன்,
அண்ணன்கள் எல்லாம் வசதியாக இருக்கிறார்கள்,
நான் டிரைவராக கஷ்டப்படுகிறேன் என்று அம்மாவும் நிறைய முறை வருத்தப்பட்டு இருக்கிறார் என்று சொன்னார்!
இவரைப்போன்ற மகன்களை பெற்றவர்கள் தான் உண்மையான பாக்கியசாலிகள்!
தாயையும் மிஞ்சக்கூடிய ஒரு அன்பை இவரிடம் பார்த்து மிகவும் நெகிழ்ந்து போனேன்!
சினிமா சம்மந்தமாகவோ பொதுவான பேச்சுக்களிலோ அம்மாவின் மீது பாசம் கொண்ட மகனைப்பற்றி பேச்சு வந்தால் முதலில் இவர்தான் ஞாபகம் வருகிறார்!
உண்மையில் எந்த நண்பரின் குடும்பத்தோடு கோயிலுக்கு சென்றேன் என்பது முழுமையாக ஞாபகம் இல்லை!
எத்தனை வருடங்களுக்கு முன் என்பதும் சரியாக ஞாபகம் இல்லை!
எந்த கோயில் எந்த சாமி எதுவும் ஞாபகம் இல்லை ஆனால் இவரின் உடை முதல் உருவம் வரை எல்லாம் தெளிவாக ஞாபகம் இருக்கிறது!
காரணம் அவரின் அந்த குணம், பண்பு, செயல், நேர்மறை சிந்தனை, அளவுக்கு அதிகமான அன்பு!
இதுபோன்ற மனிதர்கள் அபூர்வம்!
அம்மாவை பார்த்துக்கொள்வது கடமை என்றால் அதிகபட்சம் ஆள்வைத்து பார்த்துக்கொள்வார்கள்,
தானே அன்போடும் அவருக்கு சேவை செய்வதை தன் கடமையாகவும் நினைக்கும் போது தான் அவர் உயர்ந்து நிற்கிறார்!
கடவுள் உங்களின் அண்ணன்களுக்கு எல்லா செல்வங்களையும் கொடுத்து சந்தோஷமாக வைத்திருக்கிறார்,
ஆனால் உங்களுக்கு மட்டும் தான் அம்மாவை பார்த்துக்கொள்ள கூடிய பாக்கியத்தையும் புண்ணியத்தையும் கொடுத்திருக்கிறார் அதற்காக நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்று சொன்னேன்!
கருப்பு நிறம், வெள்ளை சபாரி, நரைத்த முடி இந்த மூன்றையும் ஒன்றாக பார்க்க நேர்ந்தால் முதலில் ஞாபகம் வருவது அந்த மனிதர் தான்!
எங்கிருந்தாலும் நிச்சயம் சந்தோஷமாகத்தான் இருப்பார்!
காரணம் அவருடைய அன்பும் நேசித்தலுமான நேர்மறை வழி!