சாது ஒருவர் செய்த கடுந்தவத்தின் காரணமாக, அவருக்கு பல சித்திகள் கைவரப்பட்டன. அதனால், அவருக்கு கர்வம் வந்தது.
நல்ல குணங்களும், தவ வலிமையும் கொண்ட சாதுவின் கர்வத்தை நீக்க, திருவுள்ளம் கொண்டார், இறைவன். சன்னியாசி உருவம் தாங்கி, சாது வசித்து வரும் இடத்திற்கு சென்றார், இறைவன்.
சாதுவிடம், 'சுவாமி! தாங்கள் செய்த தவ வலிமையால், பல சித்திகளைப் பெற்றிருப்பதாக அறிந்தேன். அப்படிப்பட்ட தங்களை காண வேண்டியே இங்கு வந்துள்ளேன்...' என்றார், சன்னியாசி.
சன்னியாசியை வரவேற்று அமரும்படி கேட்டுக் கொண்டார், சாது. அச்சமயத்தில் அந்த வழியாக ஒரு யானை சென்று கொண்டிருந்தது.
'சுவாமி! தங்களால் இந்த யானையையும் கொல்ல முடியும் அல்லவா...' எனக் கேட்டார், சன்னியாசி.
'ஏன் முடியாது. இப்போது பாருங்கள்...' என்றவாறு, ஒரு பிடி மண்ணை கையில் எடுத்து, மந்திரித்து, யானையை நோக்கி வீசினார், சாது.
என்ன வியப்பு! அந்த யானை அதே இடத்தில் துடிதுடித்து செத்து வீழ்ந்தது.
உடனே, 'என்ன ஆச்சரியம்! உள்ளபடியே தங்கள் மந்திர சக்தியை புரிந்து கொண்டேன். தாங்கள் மந்திர பிரயோகத்தால் யானையை எளிதாக வீழ்த்தி விட்டீர்களே...' என பாராட்டினார், சன்னியாசி.
சன்னியாசியின் புகழுரைகள், சாதுவுக்கு பெருமகிழ்ச்சியை உண்டாக்கியது.
மீண்டும், 'சுவாமி! இப்போது தங்களால் இறந்து போன யானையை, மீண்டும் பிழைக்க வைக்க முடியுமா?' எனக் கேட்டார், சன்னியாசி.
'என்னால் எதையும் செய்ய முடியும். இப்போது பாருங்கள்...' என்றவாறு, முன் போலவே ஒரு பிடி மண்ணை கையில் எடுத்து, மந்திரித்து, கீழே சாய்ந்து கிடந்த யானையின் மீது வீசினார், சாது.
யானைக்கு உயிர் வந்தது.
மீண்டும், சாதுவிடம், 'சுவாமி! உங்கள் அபார சக்தியை புரிந்து கொண்டேன். தாங்கள் அனுமதித்தால் தங்களிடம் ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன். என்ன சொல்கிறீர்கள்?' எனக் கேட்டார், சன்னியாசி.
'சரி! தாராளமாக கேட்கலாம். அதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை...' என்றார், சாது.
'சுவாமி! தாங்கள் யானையை முதலில் கொன்றீர்கள். பின்பு அதை உயிர் பிழைக்க செய்தீர்கள். இதனால், தாங்கள் பெற்ற பலன் என்ன? தங்களுக்கு எப்படிப்பட்ட ஆன்மிக வளர்ச்சி கிடைத்தது?
'தங்களின் சித்து விளையாட்டு, பகவானை எளிதாக அடைய உதவியாக இருக்குமா?' எனக் கேட்டு, சன்னியாசி வடிவில் இருந்த இறைவன், அவ்விடத்திலிருந்து மறைந்தார்.
அரண்மனையில் உள்ள அரசனிடம் சென்ற பிச்சைக்காரன், அற்ப பொருட்களை யாசிப்பது முட்டாள்தனம். அதுபோல, பகவானது அருளை பெற்ற பக்தன், விலை மதிக்க முடியாத ஞானம், வைராக்கியம், பக்தி இவைகளை விடுத்து, சித்திகளைப் பிரார்த்திப்பானால் அவனும் ஒரு மூடனே!