Feed Item
·
Added a post

நடந்து போன செயல்களில் ஏற்பட்ட தோல்விகளை விட்டு விட்டு இனி நடக்கப் போகும் செயல்களை எப்படி வெற்றிகரமாகச் செயல்படுவது என்று முடிவு செய்ய வேண்டியது நாம் தான். அது தான் உண்மை. எத்தனைத் துன்பங்கள் வந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு மீண்டு எழுந்து வரத்தான் வேண்டும்.

மனிதனுக்குத் துன்பம் வரும் பொழுது தான் மூளை அதிலிருந்து விடுபட சுறுசுறுப்பாக இயங்கி வழியைக் காண்கிறது.

ஆகவே துன்பம் வரும் போது துவண்டு விடாமல் சுறுசுறுப்பாய் இயங்க வேண்டும்.

மனோதிடம் இருந்தால் எந்தச் சூழ்நிலையையும் எளிதில் சமாளித்து விடலாம் என்பதை அவ்வப்போது நினைவூட்டுகின்றனர் நம்மைச் சுற்றியிருக்கும் சிலர்.

ஜப்பானைச் சேர்ந்த கோட்டானி மகோட்டோ, என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி டோக்கியோ நகரத்திற்கு வந்தார். குடியிருக்க வீடு இல்லை.கையில் காசு இல்லை.

எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, தன்னை வாடகைக்கு விட முடிவு செய்தார்.

“நான் வேலையற்றவன். நகைச்சுவை உணர்வு மிக்கவன். உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக

வைத்திருக்க என்னால் முடியும். நீங்கள் கொடுக்கும் வேலைகளையும் செய்வேன்.

உணவும் தங்கும் இடமும்அளித்து, மாதம் 500 ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும்” என்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

நிறையப் பேர் கோட்டானியைத் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். ஓரிரு நாட்களிலிருந்து ஒரு வாரம், ஒரு மாதம் வரை இவரை வாடகைக்கு எடுத்தார்கள்.

500 ரூபாய் மிகவும் குறைவான ஊதியம் என்பதால் உடைகள், செருப்பு, போன் கட்டணம் என்று பலவற்றையும் தாங்களாகவே விரும்பிச் செய்கிறார்கள்.

உலகம் அன்பால் ஆன மக்களால் நிறைந்தது என்பதைக் கண்டு கொண்டேன். இதுவரை எந்த வாடிக்கையாளரும் மோசமாக நடத்தியது இல்லை என்றார்.

மனித வாழ்வில் சோதனைகளும் , துயர்களும் இயல்பானவை. அவற்றைக் கண்டு துவண்டு போகக் கூடாது. நம்பிக்கை இழந்து விரக்தி அடையக் கூடாது.

உலகில் வாய்ப்புகள் நிறைந்து உள்ளது. கொஞ்சம் மூளையை உபயோகப் படுத்தினால் நாமும் வாழ்வில் முன்னேறலாம்.....

  • 131