ராஷ்மிகாவை பொறுத்தவரை ஒவ்வொரு படமும் அவருக்கு ஒரு புதிய அனுபவம்தான். சினிமாவில் பல வெற்றிகளை பார்த்துவிட்டாலும், ஒரு புதிய படத்தில் நடிக்கத் தொடங்கும்போது தனக்குள் ஒருவித பதற்றம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், படம் வெளியாகும் நேரத்திலும் அந்த படபடப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
ஒரு திரைப்படத்தில் நடிப்பது என்பது தன்னுடைய ஒரு பகுதியை ரசிகர்களிடம் வெளிப்படுத்துவது போன்றது என்றும், அதனால்தான் ஒவ்வொரு படமும் தனக்கு ஸ்பெஷலாக இருப்பதாகவும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பயத்தை தான் எதிர்மறையான விஷயமாக பார்க்கவில்லை என்றும், அந்த பதற்றமே தன்னை இன்னும் சிறப்பாக பணியாற்ற வைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
ராஷ்மிகா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர். இருப்பினும், ரசிகர்களுக்காக ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறாரோ, அதேபோல்தான் சமூக வலைதளங்களிலும் இருக்க முயற்சி செய்வதாக கூறியுள்ளார்.
நண்பர்களுடன் இருக்கும் தருணங்கள், பயணங்கள், உடற்பயிற்சி உள்ளிட்ட தனது வாழ்க்கையின் பல விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது தனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். விமர்சனங்கள் வருவது இயல்புதான் என்றும், அனைவருடைய கருத்தையும் தன்னால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ள ராஷ்மிகா, அதற்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை மட்டும் தன்னால் முடிவு செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.