முன்பெல்லாம் படிப்பு வராத மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அடிக்கடி சொல்லும் வாக்கியம், "உனக்குப் படிப்பெல்லாம் வராது.. நீ மாடு மேய்ப்பதற்கு தான் லாயக்கு" என்பதாகும்.
ஒரு மாணவனிடம் ஆசிரியர் வழக்கமான அந்த வாக்கியத்தைச் சொன்னார். துரதிஷ்டவசமாக, அந்த மாணவன் நிஜமாகவே அவ்வப்போது மாடு மேய்த்துக் கொண்டிருந்தான்.. படிப்பிலே வீக்.
‘மாடு மேய்க்கிறது ஈஸியா?’ என்று ஆசிரியரிடம் கேட்டான்
'‘இல்லையா பின்னே? படிப்பறிவு இல்லாதவன் தானே மாடு மேய்க்கிறான்?’' என்றார் ஆசிரியர்.
‘'அம்பது மாடுல எது கன்னியப்பச் செட்டியார் மாடு, எது பாண்டிய நாடார் மாடுன்னு உங்களாலே கண்டுபிடிக்க முடியுமா?’'
ஆசிரியர் அதிர்ந்தார்...
‘'எல்லா மாடும் ஒரே இடத்துலதான் மேயுமா?’'
அடுத்த கேள்வி இன்னும் அதிகமாகத் தாக்கியது.
‘'எது எங்கே மேயும்ன்னு பாத்து ஓட்டிக்கிட்டு வருவீங்களா?’'
இப்போது ஆசிரியர் பாண்டியராஜன் போல விழித்தார்.
'‘மாடு எப்ப சாணி போடும்ன்னு தெரியுமா?’'
இப்போது விழி ஆடு திருடின கள்ளன்போல் ஆயிற்று.
'‘சாணி மொத்தத்தையும் கூடைல பிடிப்பீங்களா? வரட்டி தட்டத் தெரியுமா? வரட்டியில ஏன் வைக்கோல் போடணும்ன்னு தெரியுமா? அது ராடு வச்ச கான்க்ரீட்போல ஸ்ட்ராங்குன்னு தெரியுமா?’
கேள்விகள் சரமாரி ஆயின.
'‘எனக்கு மாடு மேய்க்க வரல்லைன்னுதான் எங்கப்பா படிக்க அனுப்பிச்சார் தெரியுமா? 'நீ மாடு மேய்க்க லாயக்கில்லை, பேசாம படிச்சி வாத்யார் ஆயிடு'ன்னு அனுப்புச்சாரு’'.
அதற்கப்புறம், அந்த வாத்தியார் யாரையுமே நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று சொன்னதே இல்லை!