நடிகை ஸ்ருதிஹாசன், துல்கர் சல்மான் ஜோடியாக ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்திலிருந்து அவருடைய தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாடுவது, இசையமைப்பது, எழுதுவது, நடிப்பு ஆகிய துறைகளில் நான் சென்று கொண்டிருக்கிறேன். இதற்கு கலைகளில் பல்வேறு திறமை கொண்ட பெற்றோருடன் வளர்ந்தது காரணம். நான் வளர்ந்த சூழல் எனக்கு அதைத் தந்திருக்கிறது. நான் விரும்பிய விஷயங்களைச் செய்ய அனுமதி வழங்கியது.
2018-ல் நடிப்பிலிருந்து சில காலம் இடைவெளி எடுத்துக் கொண்டது பற்றி கேட்கிறார்கள். அந்த இடைவெளி, நான் யார் என்பதை மறுமதிப்பீடு செய்து, என்னை நானே ஆராய்வதற்கான நேரமாக இருந்தது. சில மனநலப் பிரச்சினைகளுக்காகவும் நேரம் எடுத்துக்கொண்டேன்.
நான் பல ஆண்டுகளாகக் கடுமையான பதற்றத்தால் அவதிப்பட்டேன். அந்த பதற்றத்துடன் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர முடியவில்லை. நான் எதைத் தேடுகிறேன், நான் யார் என்பதில் எனக்குத் தெளிவில்லை. அந்த இடைவெளியில், லண்டனில் இருந்தேன். அங்கு இசையின் மூலம் என்னை நான் மீண்டும் கண்டறிந்தேன்.
தினமும் என் உடைகளை நானே துவைப்பது, எனக்கான உணவை நானே சமைப்பது, மெட்ரோ ரயிலில் பயணிப்பது, திரும்பி வந்து புதிதாக எழுதப் பயிற்சி செய்வது, பின்னர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த இசையைச் சோதித்துப் பார்ப்பது என என் வாழ்க்கையை அமைத்திருந்தேன்.
இப்போது ஒரு கலைஞராக இருப்பதை மிகவும் விரும்புகிறேன். அது மகிழ்ச்சியைத் தருகிறது. வழக்கமான கதாபாத்திரங்களை விடுத்து சவாலான வேடங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன். இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.
