Feed Item
·
Added a post

அப்ப வீடு வீடாக வெண்ணெய் விற்றவர்...

இப்ப ரூ.1400 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் ஓனர்; இவர் யார் தெரியுமா?

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகிலுள்ள விருப்பாச்சி என்ற குக்கிராமத்தில் பிறந்த ஜி.ஆர். பாலசுப்பிரமணியம், 1984-ல் பெங்களூருவில் தொடங்கிய 'ஜி ஆர் பி' என்ற ப்ராண்டை இன்று பால் பொருட்கள், ஸ்னாக்ஸ், இனிப்புகள் என பல்வேறு துறைகளில் விரிவுபடுத்தி, உலகளாவிய அளவில் ரூ.1,400 கோடி வருவாய் கொண்ட நிறுவனமாக உயர்த்தியுள்ளார்.

கல்வியை 8ஆம் வகுப்பில் நிறுத்தி, 13 வயதில் பெங்களூரு சென்ற இவர், தனது அக்கா குடும்பத்துடன் இணைந்து வெண்ணெய் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டதிலிருந்து தொழில் பயணத்தைத் தொடங்கினார்.

பின்னர், 28 வயதில் வெறும் ரூ.6,000 முதலீட்டுடன் தனியாக தொழில் தொடங்கி, ஆரம்ப சவால்களை எதிர்கொண்டார். வெண்ணெயை நெய்யாக மாற்றி ஹோட்டல்கள் மற்றும் கடைகளுக்கு விற்பனை செய்வது போன்ற புதுமையான யோசனைகள் அவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. 1986-ல் 'ஜி ஆர் பி' என்ற பெயரில் ப்ராண்டை அறிமுகப்படுத்தி, பெங்களூரு முழுவதும் நேரடி விற்பனை முறையில் தனது நெய் தரத்தை மக்களிடம் கொண்டு சென்றார்.

1993-இல் இந்தியாவில் முதன்முறையாக நெய்யை FMCG முறையில் விநியோகிக்கும் முன்னோடியானார். தொடர்ந்து, 1999-ல் ஓசூரில் நவீன உற்பத்தி ஆலையை அமைத்து, சென்னை உள்ளிட்ட சந்தைகளில் கடும் போட்டியையும் தாண்டி தனது இடத்தை உறுதிப்படுத்தினார். பின்னர் 'Udhayam' என்ற உள்ளூர் ப்ராண்டையும் உருவாக்கி சந்தையை விரிவுபடுத்தினார். தற்போது ஜி ஆர் பி இந்தியாவைத் தாண்டி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. 2000-களுக்குப் பிறகு இனிப்புகள், ஸ்னாக்ஸ், மசாலா, instant mix போன்ற துறைகளிலும் நுழைந்து, தனது தயாரிப்பு வரிசையை விரிவாக்கியது.

திண்டுக்கல் நிலக்கோட்டையில் ரூ.200 கோடி மதிப்பிலான புதிய ஆலையையும் அமைத்து, மொத்தம் 6 உற்பத்தி நிலையங்களுடன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முழுமையாக ஸெல்ப் மேட் (bootstrapped) முறையில் வளர்ந்த இந்த நிறுவனம், இன்று சுமார் 2,500 ஊழியர்களுடன் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது.

பாலசுப்பிரமணியத்தின் வணிக தத்துவம் தரத்தில் எந்த சமரசமும் இல்லாத அணுகுமுறை, தொழிலை ஒரு ஆர்வமாகக் கருதுதல், ஊழியர்களை திறமையின் அடிப்படையில் தேர்வு செய்தல், மற்றும் போட்டியை நேர்மறையாக கருதுதல் ஆகியவையாகும். தன்னடக்கமும், தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் இணைந்த அவரது வாழ்க்கைப் பயணம், ஒரு சாதாரண கிராமத்திலிருந்து உலகளாவிய பிராண்டை உருவாக்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

  • 16