ஒரு பண்ணையார் வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது. வலையை விட்டுத் தலையை உயர்த்திப் பார்த்தது.
வீட்டின் பண்ணையாளரும். அவரது மனைவியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டு இருந்தார்கள். ஏதோ நாம் சாப்பிடக் கூடிய பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.
அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப் பார்த்ததும் எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
உடனே ஒரே ஓட்டமாக ஓடி வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது.,
"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது என்றது...
அதற்கு அந்தக் கோழி,' உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய செய்தி தான்..' நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது.,
உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே செய்தியை போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு ."நான் எலிப்பொறியை எல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.
மனம் நொந்த எலி அடுத்துப் பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே செய்தியைச் சொல்லியது. ஆடும் அதே பதிலைச் சொல்லியது.. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை..,
"எலிப்பொறியைப் பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.
அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு வீட்டுக்காரரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.
ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக் கொண்டு விட்டது என்று பண்ணையார் மனைவி ஓடி வந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.
எலிக்குப் பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானி அம்மாளைக் கடித்து விட்டது. எஜமானி அம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.
விஷத்தை முறிக்க ஊசி போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்குக் காய்ச்சல் இறங்கவேயில்லை.
அருகில் இருந்த ஒரு மூதாட்டி.," பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு கோழி ரசம் வைத்துக் கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
கோழிக்கு வந்தது ஆப்பு... கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.
அப்போதும் பண்ணையார் மனைவியின் காய்ச்சல் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள். அவர்களுக்குச் சமைத்துப் போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.
சில நாட்களில் அந்த அம்மாவின் உடல் நலம் தேறியது. பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.
இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது...
பண்ணையார் மனைவியின் பாம்புக் கடிக்கு காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். எலி தப்பித்து விட்டது...
நம்மில் பலர் இப்படித்தான் அடுத்தவருக்கு ஆபத்து வந்தால் கண்டுக்காமல் கடக்க பழகிவிட்டோம்.
அந்த ஆபத்து அருகில் இருக்கும் நமக்கும் பேராபத்தாக வந்து விடும் வாய்ப்பு இருப்பதை ஏனோ மறந்து விடுகிறோம்...
மற்றவர்களின் குறைகளை, அக்கறையுடன் கேளுங்கள்; ஆறுதல் சொல்லுங்கள்;
நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. நாலு வார்த்தை ஆதரவாகப் பேசுங்கள்.. இன்பத்தை விட, துன்பத்தில் கரம் பற்றி உடன் இருப்பதே நல்ல நட்பு...