Feed Item
·
Added article

எம்ஜிஆருக்கு ஒரு அறிமுக நாயகியை பிடித்து விட்டால், அந்த ஜோடி சிறப்பாக அமைந்தால் தொடர்ந்து அவர்களுடன் நடிக்க ஒப்பந்தம் செய்து விடுவார். சரோஜாதேவி, ஜெயலலிதா, லதா ஆகியோருடன் இப்படியான ஒப்பந்தம் இருந்தது. இந்த வரிசையில் மஞ்சுளாவும் இருந்தார் என்பது பலர் அறியாதது. குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த மஞ்சுளா உரிய வயதில் நாயகியாக நடிக்க தயாரானார். 'சாந்தி நிலையம்' என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் 'ஜெய் ஜவான்' என்ற படத்தில் நடித்து விருதும் பெற்றார்.

இந்த நிலையில் ஏவிஎம் ஸ்டூடியோவில் மஞ்சுளாவின் போட்டோஷூட் நடந்தது. அந்த பக்கம் தற்செயலாக சென்ற எம்ஜிஆர் இதை கவனித்து, இந்த பெண் இவ்வளவு அழகாக, துறுதுறு என்று இருக்கிறாளே என்று கருதினார். உடனடியாக மஞ்சுளாவின் பெற்றோரை அழைத்து உங்கள் மகள் என்னுடன் 5 வருடம் நடிக்க தயாரா என்றார். கரும்பு தின்ன கூலியா என்று உடனடியாக அவர்களும் சம்மதித்தார்கள்.

ரிக்ஷாக்காரன் முதல் படம். அதில் துடுக்குத்தனமான சென்னை குடிசை வாழ் பெண்ணாக நடித்து அசத்தினார். அப்போது அவருக்கு வயது 16. 'உலகம் சுற்றும் வாலியன்', 'இதய வீணை', 'நேற்று இன்று நாளை', 'நினைத்ததை முடிப்பவன்' படங்களில் நடித்தார். எம்ஜிஆருடனான ஒப்பந்தம் முடிந்ததும், சிவாஜியுடன் 'டாக்டர் சிவா', 'எங்கள் தங்க ராஜா', 'அவன் தான் மனிதன்', 'என் மகன்', 'அன்பே ஆருயிரே', 'மன்னவன் வந்தானடி', 'உத்தமன்', 'அவன் ஒரு சரித்திரம்', 'நெஞ்சங்கள்' படங்களில் நடித்தார். தெலுங்கில் டாப் ஹீரோக்களான என்.டி.ஆர்., ஷோபன் பாபு மற்றும் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தார். மஞ்சுளா ஹீரோயினாக நடிக்கும் காலம் வரை கிளாமர் ஹீரோயினாகவே இருந்தார்.

  • 19