Feed Item
·
Added article

மும்பையில் உள்ள தனது மகனின் வீட்டில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்துள்ளார் வாலியின் தாய். தனது சகோதரனின் வீட்டில் இருக்கும் தாய் உங்களைக் காண விருப்பப்படுகிறார் என டி.எம்.எஸ்ஸிடம் கோரிக்கை வைத்தார் வாலி. உடனே சென்று அவரைப் பார்த்து அவருக்கு விருப்பமான இரு பாடல்களைப் பாடி விட்டு வந்திருக்கிறார் டி.எம்.எஸ். அதில்தான், தான் எத்தகையை சிறந்த மனிதாபிமானம் கொண்டவர் என்பதை மிகவும் உணர்வுபூர்வமான விதத்தில் நிரூபித்துள்ளார்.

டி.எம்.எஸ்ஸின் மூத்த மகன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பாகப்பிரிவினை படத்தில் பாட அழைத்துள்ளார்கள். மகனின் நிலை கண்டு அழுதுகொண்டிருந்த டி.எம்.எஸ். பாடச் சென்றுள்ளார். வழக்கமாக பாடும்போது இரண்டு முறையாவது ஒத்திகை பார்ப்பார் டி.எம்.எஸ். அன்றைக்கு டியூனும் பாடல் வரிகளையும் கேட்டார். இசையமைப்பாளரிடம் பாடிக்காண்பித்தார். நேராக டேக்குக்குச் சென்றுவிட்டார். ஒரே டேக்கில் பாடலைத் துல்லியமாகப் பாடிவிட்டார். அன்று அவர் இருந்த நிலைக்குக் கச்சிதமாக இருந்தது பாடலின் வரிகள்.

ஏன் பிறந்தாய் மகனே... பாடல் தான் அது.

பாடலைப் பாடிவிட்டு வீட்டுக்கு வந்தால் மகனின் உயிர் பிரிந்திருந்தது.

மகனின் நினைவு வரும் என்பதால் அந்தப் பாடலை மட்டும் எந்த மேடையிலும் பாடக்கூடாது என முடிவெடுத்தார் டி.எம்.எஸ். எத்தனை பெரிய நபர் கேட்டாலும் பாடமாட்டார். வானொலியில் இந்தப் பாடல் ஒலித்தாலும் அணைத்துவிடுவார்.

1959-ல் அந்தப் பாடலைப் பாடிய டி.எம்.எஸ்., தனது நிலைப்பாட்டை ஒருவருடத்தில் மாற்றிக்கொண்டார், வாலியின் தாய்க்காக.

தன்னைப் பார்க்கவேண்டும் என்று விருப்பப்பட்ட வாலியின் தாய், ஏன் பிறந்தாய் மகனே பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டதும் துடிதுடித்துப் போய்விட்டார் டி.எம்.எஸ். ஆனாலும் சில நொடிகளில் அந்த முடிவை எடுத்தார். உடல்நலமில்லாமல் இருக்கும் இந்தத் தாயின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும். தனது மனத்தை மாற்றிக்கொண்டு அவர் கேட்டபடியே உருக்கமாகப் பாடினார். ஏன் பிறந்தாய் மகனே...

  • 107