Feed Item
·
Added article

சிவாஜிக்கு வசனம் எழுதுவது என்றால் எழுத்தாளர்களின் பேனாக்கள் அதிக மையை செலவழிக்கும்.மற்ற நடிகர்களுக்கு எழுதுவதை விட அதிக வார்த்தைகளை அவர்கள் தேடவேண்டியிருக்கும்.

வார்த்தைகள் தான் வடிக்கப்படுகின்றன.சிவாஜி பேசும் போது

அனலாய் தெறிக்கப்படுகின்றன.

கஷ்டப்பட்ட தேடிய வார்த்தைகளுக்கு தங்கமுலாம் பூசியிருப்பார் நடிகர்திலகம் தன் நாவால்..

பராசக்தி ..

நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த என்ற சொல்லாடலில் அமைதியாக பயணிக்க ஆரம்பிக்கும் குணசேகரனின் நீதிமன்ற வாதம். பயனுள்ள அரசியல் தத்துவம் என்ற வார்த்தையை முடிக்கும் போது தமிழ்நாடு அதிர்ந்தது அன்றே.அந்த நீதிமன்ற காட்சியிலே சிவாஜியின் தனி மனித ஆட்சி தான்.இது சிங்கமடா! இதற்கு தீனி கொடுக்க புது மாமிசம்தான் படைக்க வேண்டும் என்று புறப்பட்டார்கள்

வசன கர்த்தாக்கள்.புதிது புதிதாய் யோசித்தார்கள். எழுதினார்கள்.இதற்கு அஸ்திவாரம் பராசக்தி...நீதிமன்ற காட்சியின் ஹைலைட் வசனம் ஓடினாள் ஓடினாள் ஓடினாள் ..இவர் பேசினார் பேசினார்..பேசித் தள்ளினார்.பார்த்தவர்களுக்கு மட்டுமன்றி கேட்டவர்களுக்கும் பற்றிக் கொண்ட நெருப்பு சிவாஜி பேசிய வசனங்கள்..

சேரன் செங்குட்டுவன்...

சிவாஜிக்கு எழுதிய வசனத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார் கலைஞர்.கோபித்துக் கொண்டார் சிவாஜி.சிவாஜியின் வருத்தம் , கோபம் பார்த்து கலைஞர் எழுதினார் சேரன் செங்குட்டுவனை.சிவாஜியை சாந்தப்படுத்த சளைக்காமல் எழுதித் தள்ளிவிட்டார் கலைஞர்.முடித்த போது பார்த்தால் 16 பக்கங்கள்.நீட்டினார் வசனங்களை சிவாஜியிடம் .

கலைஞர் ஏற்றிய வசனங்களை பார்த்து சிவாஜி, சவால் விடுவது போல இப்போது நான் என்ன செய்கிறேன் பார் என்று, 16 பக்க வசனங்களை ஒரே ஷாட்டில் ஊதி தள்ளுவது போல் பேசித் தள்ளினார் சிவாஜி ..

சிவாஜி பேசியதை பார்த்ததும் கலைஞர் நினைத்திருப்பார் ,இன்னும் பத்து பக்கங்கள் கூடுதலாக எழுதி இருக்கலாமோ என்று ...

இதுதான் ராஜா ராணி படத்தில் இடம்பெற்ற சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகம் ..

வீரபாண்டிய கட்டபொம்மன்...

பல காட்சிகள்..

ஒன்று மட்டும் இங்கே..

கட்டபொம்மனின் அரசவை. ஊர் தானியத்தை கொள்ளை அடித்தார் அவர் மந்திரி என்று ஒரு குற்றச்சாட்டு வருகின்றது. குற்றம் சொல்பவன் வெள்ளையன். மந்திரியை சிறை செய்ய தூதுவனை அனுப்புகின்றான்.

இந்தக் காட்சியில்தான்...

குற்றம் செய்தவர் மந்திரி என்று தெரிந்ததும் அவரை இடித்துரைப்பது போல் அவர் மூச்சு விடாமல் நம்மை பெருமூச்சு விட வைத்த அந்த வசனம், அதை அவர் பேசும் பாங்கு இருக்கின்றதே அதை என்னவென்று எழுத! தானாதிப்பதி பிள்ளை அவர்களே! நீவிர் சினம் காக்க ,என்று தொடங்கி ,ஏற்றமும் இறக்குமுமாக ,சீறாமலும் சினம் கொள்ளாமலும்,சிவாஜி பேசியதைக் கேட்டு நம் மார்பு ஏறும் இறங்கும்.ஒரு வித்தியாசமான வசனப் போக்கை தன் கற்பனை வளத்தால் ஆச்சர்யப்படுத்தியிருப்பார் சிவாஜி.

மனோகரா...

நீர் பொங்கும்.. அது கடல்..

சூறையாய் வீசும் ..அது காற்று..

மனோகராவில் அந்த தர்பார் வசனமும் அதே போல்தான்.அந்த இளம் காளையின் ஆவேச வார்த்தைகள் ஜல்லிக் கட்டுக் காளையின் ஆக்ரோசத்தை தான் நினைவு படுத்தும்.பொன்னும் மணியும் பூட்டி மகிழ்ந்து தங்கத்தாலான கட்டிலிலே சந்தனத் தொட்டிலிலே என்று தொடங்கி, குற்றமென்ன செய்தேன் கொற்றவனே, என்று முழக்கம் செய்ததும் ,வசனக் காட்சிகளின் உச்சங்களில் ஒன்று. அது சிவாஜிக்கு மட்டுமே ..

சிவாஜியால் மட்டுமே...

போர் புரியும் புரவல வேந்தன் போர்க்களத்திலும் பொருள் கொடுப்பான் பாணருக்கு.ஆனால் சிவனே பாணருக்கு பொருள் கொடுக்க கவிப்போர் புரிய நாடகமாட வருகிறான் பாண்டியன் அரசவைக்கு. புராணமான திருவிளையாடல் சொன்ன கதை ஒன்று இது..

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரன் சொல்லெடுக்க,

அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி

பங்கம் படவிரண்டு கால் பரப்பி – சங்கதனைக்

கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை

ஆராய்ந்து சொல்லத் தக்கவன் என சிவன் சினமாட, பார்க்கும் நாமோ பரவசத்தில் மெய்மறக்க

வாத வசனங்களில் தலையாதம் இது ..அந்த வசனங்களின் சொல் மறக்குமா?

சொன்னவனின் குரல் மறக்குமா?

சிவன் படைத்தான் சிவாஜியை ..

சிவாஜி மறக்கடித்தார் சிவனை ...

சிவனா? சிவாஜியா? தர்க்கப் போர்

வசனக் காட்சிகளின் உச்சம் நக்கீரன்-சிவாஜி

வசனக் காட்சிகள்....

பாசமலர்...

சிவாஜி ஜெமினி ,வசனங்களில் மோதும் காட்சி :

சீவிக் கொண்டிருப்பார் பென்சிலை ராஜசேகரன். அவர் பென்சிலையா சீவிக்கொண்டிருக்கிறார்? அடுத்து சொல்லப் போகும் வார்த்தைகளை தானே ? ஜெமினி கேட்கும் நியாயங்களும் சிவாஜி சொல்லும் பதில்களும் எந்த ஒரு பாசப்படைப்பிலும் காண முடியாத காட்சி, வசனங்கள் ..

தர முடியாது போ?

என்று ஒற்றைச் சொல்லில் காட்சியை முடித்திருக்கலாம் .சிவாஜி இருக்கும் போது அப்படிச் செய்ய முடியுமா? ஆரூர்தாசின் யோசனை கீறலில் விளைந்த வார்த்தைகளுக்கு கர்வம் கொள்ள வைத்தார் சிவாஜி..