- நரைமுடி என்பது பலருக்கும் தவிர்க்க முடியாத பிரச்னை.இதற்கு தீர்வாக இயற்கை முறையில் இந்த எண்ணெய்யை முயற்சித்து பார்க்கலாம்.
- இந்த இயற்கை வழிமுறைகள் உச்சந்தலையை ஊட்டப்படுத்தி, வேர்க்கால்களை வலுவாக்கி முடியின் நிறத்தை இயற்கையாகவே மீட்டெடுக்க உதவுகின்றன.
தேவையானவை:
- தேங்காய் எண்ணெய் - 500 மில்லி (செக்கு எண்ணெய்)
- அவுரிப் பொடி - ஒன்றரை டீஸ்பூன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)
- நொச்சி இலை -ஒரு கைப்பிடி அளவு
- எலுமிச்சை - 1 (நான்காக நறுக்கிக் கொள்ளவும்)
- மஞ்சள் கரிசலாங்கண்ணி - 3, மருதாணி இலை - 3 கைப்பிடி அளவு
- கற்றாழை - ஒரு துண்டு
- சின்ன வெங்காயம் - 5
- ஆமணக்கு இலை - 2 கைப்பிடி அளவு
- கருவேலம் பட்டை - ஒரு துண்டு
- நெல்லிக்காய் - 5
- கசகசா - ஒன்றரை டீஸ்பூன்
- பாதாம் - 5
- சுரைக்காய் - 100 கிராம்
- வேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு,செம்பருத்தி இலை - 2 கைப்பிடி அளவு
- முருங்கைக் கீரை - 2 கைப்பிடி அளவு
- செம்பருத்தி பூ - 5
- தேங்காய்ப்பால் - 50 மில்லி
செய்முறை:
- கசகசா, பாதாம் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து முதல் நாள் இரவில் ஊறவைத்துக் அரைத்துக்கொள்ளவும். சுரைக்காயை தோல் நீக்கி துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
- 100 கிராம் தேங்காய் எண்ணெய்யைத் தனியாக எடுத்து கருவேலம் பட்டையை அதில் ஊறவைக்கவும். ஒரு நாள் முழுவதும் ஊறவைத்த பின் தேங்காய் எண்ணெய் சிவப்பு நிறமாக மாறியிருக்கும்.
- நொச்சி இலை, கரிசலாங்கண்ணி, மருதாணி, கற்றாழை, சின்ன வெங்காயம், ஆமணக்கு இலை, நெல்லிக்காய், செம்பருத்தி இலை, முருங்கைக் கீரையை தண்ணீரில் சுத்தம் செய்து அம்மியில் அரைத்துக்கொள்ளவும். அம்மி இல்லாதவர்கள் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளலாம்.
- அடுப்பில் வாணலியை வைத்து 400 கிராம் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஐந்து நிமிடம் எண்ணெய்யைச் சூடாக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால் ஊற்றி மூன்று நிமிடம் கொதிக்கவிடவும்.தேங்காய்ப்பாலின் பச்சை வாசனை அடங்கிய பின் சுரைக்காய் துண்டுகள், கசகசா விழுது சேர்த்து எண்ணெயைக் கொதிக்கவிடவும்.
- எண்ணெய் 5 நிமிடம் கொதித்த உடன் அரைத்து வைத்துள்ள மூலிகையையும் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொதிக்கவிடவும்.
- எண்ணெய்யின் நிறம் பச்சை நிறமாக மாறிய பின் எலுமிச்சை, அவுரிப்பொடி, செம்பருத்தி, சேர்த்து கொதிக்க விடவும்.
- எலுமிச்சை எண்ணைய்யில் நன்றாக வெந்த பின் எண்ணெய்யின் நிறம் கறுப்பாக மாறியிருக்கும். இந்த பதம் வந்ததும் அடுப்பில் இருந்து எண்ணெய்யை இறக்கவும்.
- எண்ணெயை வடிகட்டிக்கொள்ளவும்.
- இத்துடன் கருவேலம் பட்டை ஊறவைத்த எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
- சூடு ஆறியதும் எண்ணெயை ஒரு பாட்டிலில் நிரப்பி தினமும் பயன்படுத்தி வர நரைமுடியை தடுக்கலாம்.கூந்தலும் செழிப்பாக வளரும்.
குறிப்பு
- மூலிகைகள் கிடைக்கவில்லை எனில் நாட்டு மருந்துக் கடைகளில் மூலிகைப் பொடி வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது சீஸன் சமயத்தில் மூலிகையை சேகரித்து காயவைத்துப் பொடித்து தேவையான போது எண்ணெய் காய்ச்சிக்கொள்ளலாம்.
- மூலிகை நிறைந்த எண்ணெய் என்பதால் உடல் சூடு நீங்கி குளிர்ச்சி அடையும். சிலருக்கு சளித் தொல்லை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற பிரச்சனை உடையவர்கள் கற்றாழையின் அளவைக் குறைத்துக்கொள்ளலாம் அல்லது கூடுதலாக நொச்சி இலை சேர்த்துக்கொள்ளலாம்.
- இரும்புப் பாத்திரத்தில் எண்ணெய் காய்ச்சினால் கூடுதல் பலன் கிடைக்கும்.
- முடி அதிக வறட்சியாக உள்ளது எனில் செம்பருத்தி பூவின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம்.
- குறிப்பு: 500 மில்லி தேங்காய் எண்ணெய்யை மூலிகை கலந்து காய்ச்சினால் 350 மில்லி கிடைக்கும்.
....இணையத்தகவல்