'நாடோடிகள்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமானவர் நடிகை அபிநயா. அந்த படத்தில் அவரது இயல்பான நடிப்பு பெரும் கவனத்தை பெற்றதுடன், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள உதவியது. தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள அவரது புதிய போட்டோவை பார்த்த ரசிகர்கள், "அடடே... இது அபிநயாவா?" என்று ஆச்சரியமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாடல் உலகில் தனது பயணத்தை தொடங்கிய அபிநயா, 2008ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அறிமுகமானார். பின்னர் தமிழில் 'நாடோடிகள்' படத்தின் மூலம் நல்ல பெயரை பெற்றார். அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன், ஈசன், 7ஆம் அறிவு, வீரம், பூஜை, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். கதாபாத்திரம் சிறியது பெரியது என்று பாராமல், தன்னுடைய நடிப்பால் ஒவ்வொரு படத்திலும் கவனம் ஈர்த்தவர் அபிநயா.
கடந்த ஆண்டு வெளியான 'பனி' திரைப்படத்தில், நடிகர் ஜோஜு ஜார்ஜின் மனைவியாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரமும் நல்ல வரவேற்பைப் பெற்று, படம் வசூலிலும் வெற்றி கண்டது. கேட்கவும் பேசவும் முடியாத உடல்நல சவால்கள் இருந்தபோதிலும், அவற்றை தாண்டி தன்னம்பிக்கையுடன் சினிமாவில் வெற்றி பெற்று வருவது அபிநயாவின் வாழ்க்கைப் பயணத்தின் சிறப்பு. இவர், கடந்த ஆண்டு தன்னைப் போலவே மாற்றுத் திறனாளியான தனது பள்ளி பருவ நண்பரை காதல் திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டுகளாக நீண்ட காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார்
தற்போது, அபிநயா சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை அபிநயா சமீபத்தில் பகிர்ந்துள்ள குட்டை உடையில் இருக்கும் அழகான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டைலான தோற்றத்தில், தன்னம்பிக்கை நிறைந்த முகபாவனையுடன் இருக்கும் அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் நாடோடிகள் அபிநயாவா இது? என்றும் "அழகே அழகு" என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.