காமெடி நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கி, இன்று கதையின் நாயகனாக வெற்றிகரமாக வலம் வரும் சூரி, அடுத்ததாக 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார். கடலோர மக்களின் வாழ்க்கையையும், படகு பந்தயத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ரசிகர்களின் செயல்பாடு குறித்து சூரி பேசியிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது, தனது முந்தைய படமான மாமன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட சம்பவத்தை குறிப்பிட்ட சூரி, "அது எனக்கு சந்தோஷம் கொடுக்கவில்லை. உண்மையை சொல்லணும்னா, வெட்கமாகத்தான் இருந்தது" என்று வெளிப்படையாக கூறினார்.
மேலும், "சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வளர்ந்தவன் நான். அந்த பசியோட வலி என்னன்னு எனக்கு தெரியும். நீங்க சாப்பாட்டை மதிக்காமல், வீணாக்கி இப்படிச் செய்வது சரியில்லை. ஒரு படம் நல்லா இருந்தா மக்கள் பார்த்து வெற்றி பெற வைப்பாங்க. மண்சோறு தின்றா படம் ஓடாது. இது முழுக்க முழுக்க முட்டாள்தனம் தம்பி" என்று எந்தவித தயக்கமும் இல்லாமல் தனது ரசிகர்களுக்கே அறிவுரை கூறியுள்ளார்.
