- · 15 friends
-
S
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் இன்றும் பாரிய சவாலாக விளங்குகின்றன.
இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு போரிலும் போருக்கு பின்னரான காலத்திலும் கண்ணி வெடிவெடிகளின் ஆபத்து என்பது சவாலாகவே உள்ளன.குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு இவ்வாறான கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் இன்றும் பாரிய சவாலாக விளங்குகின்றன.இலங்கையில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட நாடுகளிலும் இது ஒரு சவாலாகவே உள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வெடிபொருட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக முகமாலைப்பகுதி காணப்படுகின்றது. யுத்தம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமது சொந்த நிலத்திற்கு திரும்ப முடியாத நிலையில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு பகுதிகளிலும் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.
குறிப்பாக வடக்கு கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயங்கள் நிலச் சுவிகரிப்புக்கள் வெடிபொருள் அச்சுறுதத்தல்கள் என்பன காரணங்களாக அமைகின்றன.வடபகுதியின் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகமாலை இத்தாவில் இந்திராபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் இன்றுவரை மீள் குடியேற முடியாது வாழ்ந்து வருகின்றனர்
கடந்த 11 ஆண்டுகளாக பல கஸ்டங்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்கடந்த 1999ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த காலம் வரையும் அதன் பின்னர் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி முதல் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிகளில் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புக்களும் பரஸ்பரம் மோதிக்கொண்ட ஓர்பகுதியாகவும் தினமும் பல உயிர்களை காவுகொண்டும் பலரை அங்கவீனர்களாகிய ஓர் பகுதியாகவும் கிளாலி முதல் முகமாலை நாகர்கோவில் வரையான முன்னரங்க நிலை காணப்பட்டது.
இது அப்போது போரில் ஈடுபட்ட இரு தரப்புக்களினதும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் களமாகவும் கூட இருந்துள்ளது.அங்குலம் அங்குலமாக சின்னாபின்னமாக வெடிபொருட்கள் விதைக்கப்பட்டும்; எறிகணைகள் துப்பாக்கி ரவைகள் என்பவற்றால் சல்லடை போடப்பட்டு எண்ணற்ற உயிர்கள் பறிக்கப்பட்ட ஓர் இடமாகவும் அப்போது முகமாலையும் அதனை அண்டிய பகுதிகளும் இருந்துள்ளன.
இதிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீளவும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் வகையில் முகமாலை பகுதியில் வெடிபொருட்களை அகற்றும் பணிகள் கண்ணிவெடிகளை அகற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கடந்த 2010ம் ஆண்டு முதல் இன்று வரை பெரும் சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இங்கிருந்து இடம் பெயர்ந்துள்ள நிலையில் இதுவரை மீள் குடியேறமுடியாத வாழ்ந்து வரும் பலர் குறிப்பிடுகையில் எங்களது சொந்த வீடு இல்லாத துன்பத்தை கடந்த 25 வருடங்களாக அனுபவித்து விட்டோம். அதாவது 1996ம் ஆண்டு டிசம்பர் மாதம் எங்களுடைய சொந்த ஊரில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று தற்போது யாழ்ப்பாணத்தில் வாடகை வீடொன்றில் வாழ்ந்து வருகின்றோம். நாங்கள் வாடகை வீடென்றாலும் நின்மதியாக வாழவில்லை. அடிக்கடி பல வீடுகளுக்கு மாறிமாறி தான் இருந்தோம்.
தற்போது கூட ஒரு இலட்சம் ரூபா முற்பணமாகவும் கொடுத்து மாதாந்தம் நான்காயிரம் ரூபா வாடகையாக கொடுக்கின்றோம்.
கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்று மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு 12 ஆண்டுகளாகியும் எங்களுடைய காணியை பார்க்க வேண்டும் எங்களது வீட்டில் குடியிருக்க வேண்டும் என அவாவும் ஆசையும் எங்களுக்கு நிறையவே இருக்கின்றதுகுறிப்பிட்ட காலம் நாங்கள் உறவினர்களின் காணியில் வசித்து வந்த காலப்பகுதியில் பல துன்பங்களை அனுபவித்து விட்டோம். அதாவது வேலி பிய்ந்து விட்டது. வேலியை அடைத்து விடுங்கள் இரவானால் கிணற்றில் தண்ணீர் அள்ளாதீர்கள் என்பார்கள் எங்கள் ஆசைக்கு ஆடு மாடு எதனையும் வளர்க்க முடியாது. இப்படி எத்தனையோ கஸ்ரங்களை அனுபவித்து விட்டோம். எனவே எங்களது காணிகளில் வெடிபொருட்களை அகற்றி எங்கள் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும் என எல்லோரிடமும் கோரிக்கை விடுக்கின்றோம் என இந்தப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வாழும் குடும்பங்கள் ஆதங்கபடுகின்றன.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை பகுதியில் தற்போது வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதி தவிர அதன் கிழக்கு பகுதி இதுவரை வெடிபொருட்கள் அகற்றப்படாத மிக ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது,இந்நிலையில் மீள்குடியேற்றத்திற்கு அடையாளப்படுத்தப்பட்டு மக்கள் மீள்குடியேறிய பகுதி தவிர ஏனைய பகுதிக்குள் பொதுமக்கள் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் குறித்த பகுதிகள் மிக ஆபத்தான பகுதிகளாக இருப்பதனால் இவ்வாறான பகுதிக்குள்; பொதுமக்கள் செல்வதை முற்றாக தவிர்துக்கொள்ளுமாறும் சிறுவர்கள் மற்றும் ஏனையவர்கள் வெடிபொருட்கள் ஆபத்தான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவித்துக் கொள்ளுமாறும் உரியஅதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்ற போதும் அதனையும் மீறி பலர் உட்சென்று விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புக்களை எதிர் கொள்வதும் காயடைவதும் தொடர்கின்றன.முகமாலை போன்று கடந்த யுத்த காலத்தில் வடக்கின் 640 கிராமங்களில் சுமார் 105 மில்லியன் வரையான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக கடந்த 2010ம் ஆண்டு யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் மக்கள் மீள்குடியேறுவதற்கும் பயிர் செய்கை நிலங்களில் தமது வாழ்வாதார பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டாலும் இன்னும் சில பகுதிகள் வெடிபொருட்களின் ஆபத்துக்குள் காணப்படுகின்றன.
குறிப்பாக வடபகுதியின் மிக ஆபத்தான பகுதியாக கிளாலி தொடக்கம் முகமாலை நாகர்வோவில் வரையான பகுதிகள் மிகவும் வெடிபொருள் ஆபத்து நிறைந்த பகுதிகளாக காணப்படுகின்றன.இதில் முகமாலைப் பகுதியே மிக ஆபத்தான பகுதியாக இன்றும் உள்ளது. எனவே இவற்றை அகற்றி இந்த மக்களை விரைவாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·