நீருக்கடியில் கையை கவ்விய முதலையுடன் சண்டைபோட்டு உயிர்பிழைத்த நபர்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர், மோட்டார் சைக்கிளின் தனது குழுவினருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குயின்ஸ்லாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் இறங்கி அவர் நீந்திக் கொண்டிருந்தார்.
அப்போது நீருக்கடியில் பதுங்கியிருந்த முதலை ஒன்று அவரது ஒரு கையை பலமாக கவ்வியது. வலியால் துடிதுடித்த அவர், தன் முயற்சியை கைவிடாது, ஒரு கையை கொண்டு முதலையுடன் மல்லுக்கட்டினார்.
முதலை கையை விடாத நிலையில், தொடர்ந்து மற்றொரு கையால் முதலையை தாக்கிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் முதலை, தன் பிடியை தளர்த்திய நிலையில், சுதாரித்துக்கொண்ட அந்த நபர், முதலையை விட்டு தப்பித்து பாதுகாப்பான இடத்தை அடைந்தார். இதையடுத்து அவருடன் சுற்றுப்பயணத்திற்காக வந்த நபர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். தற்போது சிகிச்சை பெற்றுவரும் அவர், நலமுடன் உள்ளார்.
முதலை இரண்டு முதல் மூன்று மீட்டர் வரை நீளமாக இருக்கும் என்றும், தான் முதலையுடன் சண்டையிட்டதால் தான் தன்னால் உயிர்பிழைக்க முடிந்தது என்றும், நடந்தவற்றை மற்றவர்களுக்கு அவர் எடுத்துக்கூறினார்.
அதிகாரி ஒருவர் கூறும்போது, இரண்டு முதல் மூன்று மீட்டர் நீளமுள்ள முதலையுடன் மல்லுக்கட்டி உயிர்பிழைப்பது என்பது சாதாராணமான காரியம் அல்ல என்றும், அவர் உயிர் பிழைத்தது அதிஷ்டவசமான ஒன்று என்றும் அவர் கூறினார்.
முதலை தாக்குதல்கள் மிகவும் ஆபத்தான ஒன்று என்றாலும், அரிதாக நடக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. சராசரியாக ஆஸ்திரேலியாவில் ஆண்டுக்கு ஒன்று முதல் இரண்டு முதலை தாக்குதல்கள் நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.