
கோவிஷீல்டு போட்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை
இங்கிலாந்து அரசு, இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை சமீபத்தில் அங்கீகரித்தது. எனினும் இந்த தடுப்பூசி போட்ட இந்தியர்கள் இங்கிலாந்து சென்றால் பத்து நாள் தனிமை கட்டாயம் என்பது தொடரும் என அறிவித்து இருந்தது. இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இங்கிலாந்தின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, அந்த நாட்டில் இருந்து இந்தியா வருவோருக்கு பத்து நாள் தனிமை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்தியர்களுக்கு இங்கிலாந்தில் தனிமைப்படுத்துதல் தேவை இல்லை என இங்கிலாந்து நேற்று அறிவித்து உள்ளது.
அக்டோபர் 11 ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக இங்கிலாந்து தூதர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இந்தியர்கள் கோவிஷீல்டு அல்லது இங்கிலாந்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள், இங்கிலாந்திற்கு வரும் போது அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படமாட்டார்கள்.
அக்டோபர் 11 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படும். கடந்த மாதத்தில் இங்கிலாந்திற்கு முக்கியமான தருணத்தில் ஒத்துழைப்பு கொடுத்த இந்திய அரசுக்கு நன்றி என்று அலெக்ஸ் எல்லிஸ் பதிவிட்டுள்ளார்.