
லக்கிம்பூர் செல்ல ராகுல், பிரியங்கா காந்திக்கு அனுமதி
லக்கிம்பூர் பகுதியில் அரசு விழாவில் பங்கேற்கச் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் காரை, அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வெடித்த வன்முறையில், பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த விவசாயிகளை சந்திக்க தடையை மீறி சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை உத்தரபிரதேச போலீசார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்தனர். பிரியங்கா காந்தியின் கைதுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
லக்கிம்பூர் செல்ல காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உத்தரபிரதேச அரசு அனுமதியளித்துள்ளது. அவர்களுடன் மூன்று பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி விமானம் மூலம் உத்தரபிரதேசம் செல்கிறார்.