Feed Item
Added article 

நடிகை சவுகார் ஜானகிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இவர் 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். என்.டி.ராமராவ் நடித்த சவுகார் என்ற தெலுங்கு படத்தில் 19-வது வயதில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அவர் 70 வருடங்களாக சினிமாவில் நடித்துள்ளார். 1950-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை அவர் மிகவும் பிரபலமாக விளங்கினார்.

இந்த நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்றது குறித்து சவுகார் ஜானகி கூறுகையில், 

“விருது பெற்றது முதலில் எனக்கு வியப்பாக இருந்தது. நான் நினைக்காத நேரத்தில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருது என்னுடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றி. 

தான் பெற்ற விருதுகளில் பத்மஸ்ரீ விருது பெற்றதை கவுரவமாக கருதுகிறேன். எனது 91-வது பிறந்த நாளுக்கு பிறகு இந்த விருதை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை சிறந்த அங்கீகாரமாக கருதுகிறேன். விருது வழங்கிய மத்திய அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.

  • 487