Feed Item
Added a post 

சங்கடஹர சதுர்த்தி நாளில், ஆனைமுகத்தானை வழிபடுவோம். நமக்கு சந்தோஷங்களையும் வெற்றிகளையும் தந்தருள்வார் பிள்ளையாரப்பன். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையான நாளை சங்கடஹர சதுர்த்தி. சுக்கிர யோகத்தைத் தந்தருள்வார் கணபதி.

முருகப்பெருமானுக்கு தைப்பூசமும் கார்த்திகை மாதத்தின் கார்த்திகைப் பெருவிழாவும் பங்குனி மாதத்தில் உத்திரமும் வைகாசி மாதத்தில் விசாகமும் முக்கிய தினங்களாகவும் விரத நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. 

இவை எல்லாவற்றிலும் விநாயகர் வழிபாடு என்பதும் தரிசனம் என்பதும் முதலில் நடைமுறையில் இருப்பதை அறிவோம். அதன்படியே நாமும் வழிபடுவோம். அதன் பிறகே அந்தந்த கடவுளர்களை வணங்குவோம்.

பூஜையோ ஹோமமோ செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் பூஜையைத் தொடங்குவோம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, பூஜிக்கிறோம்தானே. ஏனென்றால்... ஆனைமுகத்தானே முதற் கடவுள். முழு முதற் கடவுள்.

இத்தனை மகத்துவம் மிக்க பிள்ளையாருக்கு மாதந்தோறும் வருகிற சதுர்த்தி நாளில், வழிபாடுகளும் விரதங்களும் இருப்பது எண்ணற்ற பலன்களைத் தந்தருளும். இந்த நாளை, சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.

அற்புதமான அதிர்வுகள் கொண்ட சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு அருகம்புல் மாலையும் வெள்ளெருக்கு மாலையும் சார்த்தி வழிபடுவது எண்ணியதையெல்லாம் நிறைவேற்றித் தரும் என்கிறார்கள் விக்னங்களையெல்லாம் அழித்து அருள் செய்வார் விக்னேஸ்வரர்.

சங்கடஹர சதுர்த்தி நாளில், வீட்டில், காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். இன்று ஜனவரி 21ம் தேதி வெள்ளிக்கிழமை, சங்கடஹர சதுர்த்தி. வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்பார்கள். விநாயகர் படத்தை, சுத்தமாகத் துடைத்து, சந்தனம் குங்குமமிடுங்கள். அருகம்புல் சார்த்துங்கள். விநாயகருக்கு ரொம்பவே இஷ்டமான கொழுக்கட்டை, பாயசம், சுண்டல் என உங்களால் முடிந்ததை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.

*சுக்கிர வாரத்தில் சங்கடஹர சதுர்த்தி நாளும் வருவது இன்னும் சிறப்பு வாய்ந்தது.* கணபதி துதிகளைச் சொல்லுங்கள். கஷ்டமெல்லாம் தீர்ப்பார் கணபதி. சுக்கிர யோகங்களையெல்லாம் தந்தருள்வார் விநாயகப் பெருமான்.

  • 551