Feed Item
Added a news 

அரசாங்கமும், ஜனாதிபதியும் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், நடைமுறைகளிற்கு விரோதமாகவும் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் தீர்மானங்களை எடுத்துள்ளோம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் நேற்று (27) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றம் வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவைர்களுடனான கலந்துரையாடலின் பின்ன இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவ்ர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மாலை வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் கூடி இன்றைக்கு பேசு பொருளாக இருக்கின்ற வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் நியமனம் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்தோம்.

வவுனியாவில் அரசாங்க அதிபராக இருந்த பந்துலசேனா எனும் அதிகாரி பந்துல சேனாவாக இருந்தால் அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. எங்களுடைய உருத்து எத்தனையோ லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பலி கொடுத்து இன்றும் எங்களுடைய இனத்தின் விடுதலை, எங்கள் தேசத்தின் விடுதலை, எங்களுடைய மக்களின் விடுதலையை அடையாது இருக்கின்ற பொழுதும், 13 வது திருத்த சட்டத்திலும் கூட மிக அரிதாக இருக்கின்ற சில உரிமைகள் அதைவிட ஒரு மக்கள் கூட்டத்தின் அடிப்படை உரிமை, தங்களுடைய தேசத்தில், தங்களுடைய மக்கள் மத்தியில், தங்களுடை பிறப்புரிமை தங்களுடைய மொழியில் தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே நடார்த்த வேண்டும் என்பதை நாங்கள் இன்று நிலைநாட்டி பேசினோம்.

வடக்கு கிழக்கு மாகாண சபைகளில் மிகப் பெரும்பாலான தமிழ் மக்கள் தங்களுடைய மொழியில் தங்களுடைய நிர்வாகத்தை கையாள்வதற்கே விரும்புகின்றார்கள். அப்படி ஓரளவிற்கேனும் கிடைத்த உரிமையை நாங்கள் இழக்கக்கூடாது என்பதற்காக மொழி உரிமையையும், தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே கையாள்வதற்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத் தான் பந்துலசேனாவினுடைய நியமனத்தை திருப்பி பெற்று எங்கள் மக்கள் மத்தியில் நிர்வாகத்தை செய்வதற்குஅவர்களது மொழியில் நிர்வாகத்தை நடார்த்தக்கூடிய ஒருவரை நியமிக்குமாறு தொடர்பில் நாங்கள் அரசாங்கத்தை கோருகின்றோம்.

1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் தனிச் சிங்கள மொழியாக சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நீதிமன்றங்களில் சிங்கள மொழிக்காக ஊழியர்களை அனுப்பியபொழுது, தந்தை செல்வாவும், அப்பொழுது இருந்த கட்சி தலைவர்களும் பெரும் போராட்டங்களை நடத்தியிருக்கின்றார்கள்.

அந்த விடயத்தினையும் நாங்கள் இன்று ஆராய்ந்திருந்தோம். ஆகையினால் இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் இந்த விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றி அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்று கூடிய சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைக்குள் செல்ல வேண்டும் என்றும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • 592