Feed Item
Added a news 

இங்கிலாந்து நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை தற்போது ஆயிரத்திற்கும் கூடுதலாக பதிவாகி உள்ளது. அந்நாட்டில் கடந்த 26ந்தேதி வரையில் 1,076 பேருக்கு பாதிப்பு இருப்பது ஆய்வக பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் கனடாவில் அதிக அளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆப்பிரிக்காவில் உள்ள எட்டு நாடுகளில் இதுவரை 1500-க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன் ஆகிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இதன் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நோய் பாதிப்பு பெருமளவில் எலிகள் போன்ற வன விலங்குகளிடம் காணப்படுகிறது. அவற்றில் இருந்து மனிதர்களுக்கு பரவ கூடும் என கூறப்படுகிறது. 

இதன் அறிகுறிகளாக காய்ச்சல், தோலில் அரிப்பு மற்றும் நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவை காணப்படும். இதுதவிர மருத்துவ சிக்கலான நிலைக்கும் கொண்டு செல்ல கூடும். இதன் பாதிப்பு 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 27 பேர் ஸ்காட்லாந்திலும், 5 பேர் வடக்கு அயர்லாந்திலும், 9 பேர் வேல்சிலும் மற்றும் 1,035 பேர் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் உள்ளனர். இதுபற்றி இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு கழகத்தின் இயக்குனர் சோபியா மக்கி கூறும்போது, வருகிற நாட்கள் மற்றும் வாரங்களில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.

  • 386